மாற்று கருத்தாளருக்கும் மரியாதை … துக்ளக் சோ ராமசாமி மறைவுக்கு திமுக பொதுக்குழு இரங்கல்
மாற்று கருத்தாளராக இருந்த துக்ளக் சோ ராமசாமியின் மறைவிற்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், சற்குணபாண்டியன் மறைவுக்கும் திமுக பொதுக்குழு இரங்கல் தீர்மானம் போடப்பட்டுள்ள
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுக் கருத்தாளராகவும் திமுகவை எதிர்த்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்த துக்ளக் சோ ராமசாமி மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
திமுக பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி முன்மொழிந்து, க. அன்பழகன் முன்னிலையில் பொதுக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
இதில், முதலாவதாக மறைந்த உலக மற்றும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் போடப்பட்டது.
பின்னர், தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு எதிராக பேசியும், எழுதியும் வந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ. ராமசாமியின் மறைவிற்கும் இரங்கல் வாசிக்கப்பட்டது. மேலும், திமுகவைச் சேர்ந்த கோ.சி. மணி மற்றும் சற்குணப்பாண்டியன் ஆகியோரின் மறைவிற்கும் திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3,000 பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திமுக தலைவர் கருணாநிதி பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.