ஜெ. படத்தை அகற்றுங்கள்.. இல்லாவிட்டால்...திமுக எச்சரிக்கை!
சென்னை: சட்டசபை செயலக வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும். ஜெயலலிதாவிடமிருந்து பறிபோன ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கவும் கோரி சட்டசபை செயலாளர் ஜமாலுதீனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதனால், தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ளார்.
புதிய முதல்வர் பதவியேற்று பத்து தினங்களுக்கு மேல் ஆன போதும், தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமே உள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, அதனை நீக்க வேண்டும் என அவை வலியுறுத்தி உள்ளன.
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் நேற்று மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
சொத்துக் குவிப்பு வழக்கு...
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதையும் அறிவீர்கள்.
புதிய முதல்வர்...
உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவின்படி, ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். அதன் தொடர்ச்சியாக புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று உள்ளார். அதேபோல், அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அதிர்ச்சி...
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை சட்டசபை செயலரான தாங்கள், ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. கவர்னர் அழைப்பின் பேரில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய அமைச்சரவை பதவியேற்றதை கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்.
ஸ்ரீரங்கம் தொகுதி...
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பதவி காலியானது. இதை அறிவிக்க வேண்டியது உங்கள் கடமை. ஆனால், தீர்ப்பு வெளியாகி 10 நாட்களாகியும் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கவில்லை.
சட்ட விரோதமானது...
பெங்களூரு நீதிமன்ற தீர்ப்புக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவையும், கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 7ம் தேதி நிராகரித்து விட்டது. ஆனால், சட்டசபை வளாகத்தில், ஜெயலலிதா படம் இன்னும் அகற்றப்படவில்லை. இது சட்ட விரோதமானது. இது மக்களுக்கு தவறான தகவலை அளிக்கிறது.
சட்டப்படி நடவடிக்கை...
எனவே, உடனடியாக சட்டசபை வளாகத்தில் உள்ள, ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும். ஸ்ரீரங்கம் தொகுதியை, காலியிடமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு எதிராக, சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன் என்று அன்பழகன் அதில் கூறியுள்ளார்.