ஆமாமா ஐடி ரெய்டு குறித்து நானே நியூஸ் பார்த்தேன்.. ஆளுநர் கூறியதாக துரைமுருகன் தகவல்!
அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கோரிக்கை வைத்ததாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை: : வருமான வரி சோதனைக்கு உட்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் மும்பையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கோரிக்கை வைத்ததாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக முதன்மை செயலர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் மும்பையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் வருமானவரி சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்திய கடிதத்தை அளித்தனர். வருமான வரி சோதனை பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் ஆளுநரை சந்தித்த பின் சென்னை திரும்பிய துரைமுருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு தமிழக முதல்வரே தலைமை ஏற்றது ஜனநாயக படுகொலை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையால் ரூ4.50 கோடி பணம் சிக்கியது. இதனால் தான் ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதுகுறித்து ஆளுநரிடம் எடுத்துக் கூறினோம்.
மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டோம் எனக் கூறினார். மேலும் வருமான வரித்துறை சோதனை பற்றி ஊடகங்களில் தாம் பார்த்ததாக ஆளுநர் தங்களிடம் கூறியதாகவும் துரைமுருகின் கூறினார்.