திமுகவின் 30 மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு நாளை முதல் 22-ந் தேதி வரை 'சென்னையில்' தேர்தல்!
சென்னை: திமுகவின் உட்கட்சித் தேர்தல் கிளைமாக்ஸ் நாளை தொடங்குகிறது. அதுவும் திமுக வரலாற்றிலேயே முதல் முறையாக 30 மாவட்டங்களின் செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் நடைபெறுகிறது.
திமுகவின் உட்கட்சித் தேர்தலில் வாக்களிக்கும் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 84 இலட்சத்து 36 ஆயிரத்து 744. இது திமுக நடத்தும் 14 உட்கட்சித் தேர்தல். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தேர்தல் நடத்தப்படுகிறது.
கடந்த 13வது தேர்தலில் போது மதுரை, கோவை மாநகர் உட்பட திமுக 36 மாவட்டங்களாக இருந்தன. தற்போது 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல ஒன்றியங்கள், நகரங்கள், பகுதிகள், பேரூராட்சிகள், வார்டு கிளைகள் என அனைத்தும் மிகப் பெரிய அளவில் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்ட செயலாளர் பதவி தவிர பெரும்பாலானா பதவிகளுக்கான தேர்தல் அடிதடி வெட்டுக் குத்து என கலவர களேபரங்களுடன் முடிவடைந்துவிட்டன.
புதிய பார்முலா
மாவட்ட செயலாளர் பதவிக்கு கடந்த 11-ந் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக பல முறை மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்களே மீண்டும் மீண்டும் அப்பதவியில் ஒட்டிக் கொண்டு சட்டசபை, லோக்சபா தேர்தலில் எம்.எல்.ஏ, எம்.பி.களாகி அமைச்சர்களாக வரும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க திமுக மேலிடம் ஒரு புதிய பார்முலாவை கொண்டு வந்தது.
உறுதிமொழிப் பத்திரம்
அதாவது மாவட்ட செயலாளர் பதவியில் போட்டியிடுகிறவர், சட்டசபை, லோக்சபா தேர்தலிலோ இதர கட்சிப் பதவிகளிலோ தமக்கோ தமது குடும்பத்தினருக்கோ வாய்ப்பு கேட்க மாட்டோம் என்று உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று திமுக தலைமை நிபந்தனை விதித்தது. இதனை ஏற்று முந்தைய 36 மாவட்டங்களின் 18 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர்.
சென்னையில் வாக்குப் பதிவு
அத்துடன் திமுக வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட செயலாளர் பதவிக்கான வாக்குப் பதிவு சென்னையிலேயே நடைபெறும் என்றும் திமுக தலைமை அறிவித்தது. இதன் மூலம் "ஓரளவு" வெட்டு குத்து, அடிதடி குறைந்து கட்சிக்கு கெட்ட பெயர் வராமல் தடுக்க முடியும் என்பது திமுகவின் கணக்கு. இதற்கு முன்னரெல்லாம் அடிதடி அரிவாள் வெட்டு நிகழ்ந்த மாவட்டங்களுக்கு மட்டும் சென்னையில் தேர்தல் நடத்துவது வழக்கம்.
3 நாள் தேர்தல்
தற்போது நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் 30 மாவட்டங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
நாளை தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள்..
நாளை தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, திருச்சி வடக்கு, கடலூர் மேற்கு, கன்னியாகுமரி கிழக்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கான தேர்தல் காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
நாளை மாலை 3 மணி அளவில் அண்ணா அறிவாலயத்திலேயே நாகை வடக்கு, நாகை தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெறும்.
ராயபுரம் அறிவகத்தில்...
அதே நேரத்தில் மாலை 3 மணி அளவில் ராயபுரம் அறிவகத்தில் புதுக்கோட்டை வடக்கு, புதுக் கோட்டை தெற்கு, மதுரை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறும்.
21-ந் தேதி
வரும் 21-ந் தேதி காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் திருவாரூர், கரூர், தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 3 மணியளவில், அண்ணா அறிவாலயத்திலேயே நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.
22-ந் தேதி
22-ந் தேதியன்று காலை 10 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் திருவண்ணாமலை வடக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும், அன்றைக்கே மாலை 3 மணியளவில், அண்ணா அறிவாலயத்தில், ராமநாதபுரம், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி (மத்திய) ஆகிய மாவட்டங்களுக் கும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
சென்னை வியூகம் கை கொடுக்குமா?
இந்த வாக்குப் பதிவுக்கு முன்பும் கூட கடைசி நேர 'காம்பரமைஸ்' என்ற பஞ்சாயத்து பேசி கூடுமானவரை அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தலைமைக் கழகத்தில் அதன் நேரடி கண்காணிப்பில் வாக்குப் பதிவு நடைபெறுவதால் அசம்பாவிதங்கள் குறையக் கூடும் என்ற திமுக மேலிடத்தின் "வியூகம்' கை கொடுத்ததா? என்பது நாளை தெரிந்துவிடும்.