பால் விலை உயர்வு: கொட்டும் மழையில் கருணாநிதி, ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

ஆவின் பால் விலை சமீபத்தில் 10 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை கொட்டும் மழையிலும் தி.மு.க.வினர் திரளாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டார்.
பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி அங்கு கண்டன முழக்கமிட்டார். அ.தி.மு.க., ஆட்சியில் 2-வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டதை சுட்டி காட்டி அவர் பேசினார். மின்கட்டண உயர்வுக்கும் கண்டனம் தெரிவித்து பேசினார்.

இதே போல் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றார். மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு திரும்ப பெற வலியுறுத்தி பேசினார். அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பட்டன.
இதே போல் திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூர் அண்ணா திடலில் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் சுதர் சனம் தலைமையில் ஆயிரக்கணக்கான தி.மு.க. வினர் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications