மதுவிலக்கை அமல்படுத்தும் சாத்தியக் கூறுகள் இல்லை..உருவாக்க வேண்டும் - கருணாநிதி ஒப்புதல் பேட்டி
சென்னை : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சாத்தியக் கூறுகள் இல்லை என்றும், அதனை நாம் தான் உருவாக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இதனை தங்கள் தேர்தல் வாக்குறுதியாகவே பல்வேறு கட்சிகளும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பூரண மதுவிலக்கு வலுப்பட்டு வரும் நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளீர்கள். இது எந்த வகையில் சாத்தியம் ஆகும் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும், மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் தான் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.