1967 மாதிரி 2016 சட்டமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமைப்போம்: ஸ்டாலின்
சென்னை: 1967ஆம் ஆண்டு அண்ணா உருவாக்கிய மெகா கூட்டணி போல 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், எதிர்க்கட்சிகளை இணைத்து திமுக தலைமையில் புதிய பலம் வாய்ந்த கூட்டணி உருவாக்கப்படும்' என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிர்க்கு பேட்டியளித்த ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியடைந்தது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் திமுக அமைத்த கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது.காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் காணாமலே போனது. பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக இணைந்து அமைத்த கூட்டணிக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற மகிழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு எதிரிகளே இல்லை என்றார்.
இதனால் திமுக, பாமக, பாஜக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் அதிமுகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து இந்த கட்சிகள் 2016 ஆம் சட்டமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களம் இறங்கியுள்ள இந்த அரசியல் கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கவேண்டும் என்று தனித்தனியாக பேசி வருகின்றன.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிர்க்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தற்போது எதிர்கட்சிகள் தனித்தனியாக பிரிந்து கிடப்பது உண்மைதான். 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா காங்கிரசை எதிர்க்க ஒரு முன்னிலையை (கூட்டணி) உருவாக்கினார். அது போன்று தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை ஒன்று இணைத்து பலம் வாய்ந்த கூட்டணி அமையும் சூழ்நிலை உருவாகும் என்று கூறியுள்ளார்.
2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் அல்லது பா. ஜனதாவுடன் கூட்டணி அமைப்போமா? என்று இப்போது சொல்ல முடியாது. அதற்கு தற்போது சரியான நேரம் இல்லை.
சட்டமன்ற தேர்தலையொட்டி நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. தொண்டர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்தி வருகிறேன்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து கட்சிக்கு மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்ள தி.மு.க. எப்போதும் தயாராக இருக்கிறது. தி.மு.க.வில் அனைத்து தரப்பினரும் ஒன்று இணைந்து செயல்படுகிறார்கள். கருணாநிதியே எப்போதும் தலைவராக இருக்கிறார்.
பாஜகவில் தலைமுறை மாற்றம் தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பதே எனது கருத்து என்று கூறியுள்ளார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட அழகிரியும், அழகிரியின் ஆதரவாளர்களும் வருத்தம் தெரிவித்தாலும் மீண்டும் ஏற்றுக்கொள்வோம் என்கிற ரீதியிலேயே ஸ்டாலின் கூறியுள்ளார்.
தங்களின் தலைமையில் மாற்று கூட்டணி அமைப்போம் என்று பாமக உறுதியாக அறிவித்து விட்டது. அதேபோல பாஜக தனது தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. முதல்வர் கனவில் உள்ள விஜயகாந்த் தனது தலைமையில் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல வாசன், வைகோ ஆகியோர் தனி அணியாக களம் இறங்க தயாராகிவருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஸ்டாலின் எப்படி ஒருங்கிணைக்கப் போகிறார். கூட்டணி அமைத்தால் எத்தனை இடங்களை யாருக்கு விட்டுக்கொடுப்பார்? என்று கேட்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
1967ல் அண்ணாவின் பேச்சை கேட்ட எதிர்கட்சியினர் இன்று ஸ்டாலின் பேச்சை கேட்க முன்வருவார்களா? என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருந்தாலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications