170 இடங்களில் போட்டி, ஜாதிக் கட்சிகளுக்கு "நோ".. டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டியால் திமுகவில் சலசலப்பு
சென்னை: கூட்டணி ஆட்சிக்கு முழக்கமிட்ட விடுதலை சிறுத்தைகள்... முதல்வர் வேட்பாளர் அறிவித்த பாட்டாளி மக்கள் கட்சியை புறக்கணித்துவிட்டு சட்டசபைத் தேர்தலில் 170 இடங்களில் திராவிட முன்னேற்றக்கழகம் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக "டைம்ஸ் ஆப் இந்தியா" இதழுக்கு டி.கே.எஸ் இளங்கோவன் அளித்துள்ள பேட்டி சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நிலையான ஆட்சி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என பல மாநில கட்சிகளும், இடதுசாரிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், தனி கட்சியால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும். தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள். அதை நம்பாதவர்கள் என்றும் கூறியுள்ளார் டி.கே.எஸ் இளங்கோவன். இது கூட்டணி ஆட்சி கோரி வரும் விடுதலை சிறுத்தைகளுக்கு பதிலடி தரும் விதமாக அமைந்துள்ளது.

234ல் 170ல் போட்டி
2016 தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக குறைந்தபட்சம் 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என்று கூறியுள்ளார் டி.கே.எஸ் இளங்கோவன்.

தோல்விக்குக் காரணம்
2011ம் ஆண்டு தேர்தலில் 119 வேட்பாளர்களை நிறுத்தியதே கட்சி படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. எங்களின் தோல்விக்கு காரணம் திமுக.,வின் ஓட்டு வங்கி குறைந்து விட்டது கிடையாது. தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கை குறைந்தது தான். இந்த தவறு இனி மீண்டும் நடக்காது என்றும் கூறியுள்ளார்.

அதிக தொகுதியில் போட்டி
திமுகவின் வாக்கு வங்கி அதிகரித்துப்பதாக கூறியுள்ள டி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வாசன் பிரிந்து சென்றுவிட்டது மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் கடந்த சட்டமன்ற தேர்தலைப் போல காங்கிரஸ் கட்சி இடங்கள் கேட்டு மல்லுக்கட்டக் கூடாது என்கிற ரீதியில் பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு செக்
வாசன் பிரிவினால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 30 இடங்களுக்கு மேல் போட்டியிட முடியாது என்றும் கூறி இப்போதே செக் வைப்பது போல கூறியுள்ளார் டி.கே.எஸ் இளங்கோவன். இது துணைமுதல்வர் பதவியைக் கேட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ளது.

கூட்டணிக்கு தயக்கமில்லை
சட்டசபைத் தேர்தலில் இடதுசாரிகள், தேமுதிக, மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் கூட்டணி குறித்து இதுவரை யாரிடமும் நாங்கள் பேசவில்லை என்றும் டி.கே.எஸ். இளங்கோவன்

ஜாதி கட்சிகள்
அதே சமயம், ஜாதி கட்சிகளான பாமக அல்லது விடுதலை சிறுத்தை கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள கட்சி தலைவர் கருணாநிதி தயாராக இல்லை என்றும் கூறியுள்ள டி.கே.எஸ் இளங்கோவன், சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க விரும்புகிறோம்... யாருடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications