திமுகவுக்கு 5 இடங்கள் தான் கிடைக்கும்: அழகிரி
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மூன்றில் இருந்து ஐந்து தொகுதிகள்தான் கிடைக்கும் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
திமுகவுக்கு எதிராக நான் வெளிப்படையாக பேசுவது கட்சிக்கு பலவீனப்படுத்தாதா என்று கேட்கிறீர்கள். ஆனால் என்னை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். நான் 'பவர்புல்லாக' வளர்ந்து வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். என்னிடம் பேசுவதில்லை.
நாடாளுமன்ற தேர்தலில், பலமுனை போட்டியால் திமுகவுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். அதிமுகவுக்கு ஆதாயமாக முடியும். திமுக மூன்று அல்லது அதிகபட்சம் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும். திமுக பிரமாண்டமான அளவில் இத்தேர்தலில் தோல்வியடையும் என்பது எனது கணிப்பு என்று தெரிவித்தார்.
இதுகுறித்து திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் அதே டிவிக்கு அளித்த பேட்டியில்,
"அதிமுக ஆதரவு பத்திரிகைகளில் வெளியாகும் செய்தியை படித்துவிட்டு அழகிரி அவ்வாறு கூறியுள்ளார். உண்மை நிலவரம் அது அல்ல. திமுக இத்தேர்தலில் பெரும் வெற்றி பெறும். அதிமுக ஆதரவு இல்லாத வேறு பத்திரிகைகள் திமுக பெரிய வெற்றியை பெறும் என்று கூறியுள்ளன. அதையும் அழகிரி படிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.