குன்னூர் தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி ஆ.ராசாவின் காரை மறித்து செருப்பு வீச்சு
நீலகிரி: குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் பா.மு. முபாரக்கை மாற்றக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் காரை மறித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது ராசாவின் கார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.
திமுக தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவித்த சில நிமிடங்களிலேயே கட்சியினர் பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சில தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக் கோரி போராட்டமும் நடத்தினர். போராட்டத்தை அடுத்து சில தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர்.

குன்னூர் தொகுதி வேட்பாளராக படுகர் இனத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான கா. ராமச்சந்திரன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் குன்னூர் தொகுதி வேட்பாளராக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து முபாரக்கை மாற்றக் கோரி ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். படுகர் இனத்தவர்கள் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே போட்டியிட முடியும். அப்படி இருக்கையில் தலைமை இப்படி செய்துவிட்டதே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி தொகுதி எம்.பி.யாக இருந்த ஆ.ராசாவின் பரிந்துரையின்பேரில் தான் முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கோத்தகிரியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் காரை ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது கார் மீது அவர்கள் செருப்பை வீசியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
முபாரக்கை மாற்றக் கோரி ராமச்சந்திரன் தலைமையில் சுமார் 1000 பேர் இன்று கோத்தகிரியில் போராட்டம் நடத்தினர். குன்னூரில் திமுகவினர் முபாரக் கோஷ்டி, ராமச்சந்திரன் கோஷ்டி என இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications