சட்டசபையில் இருக்கை வசதி செய்து கொடுத்தால் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பார் - ஸ்டாலின்
சென்னை: சட்டசபையில் இருக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டால் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்வது பற்றி பரிசீலனை செய்யப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 89 இடங்களில் வென்று வலுவான எதிர்கட்சியாக சட்டசபையில் அமர உள்ளது. இந்த நிலையில் சட்டசபையில் எழுப்பவேண்டிய பிரச்னைகள், விவாதத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
நாளை சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளதால் கூட்டத்தில் திமுகவின் பங்கு, செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
கூட்டத்திற்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக சார்பில் 42 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதிக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கருணாநிதி தமிழக சட்டசபைக்கு வந்து செல்லும் வகையில் உரிய இருக்கை வசதி செய்து தரப்பட்டால், கருணாநிதி சட்டசபைக்கு வருவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றார் ஸ்டாலின்.