அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. பரபரப்பு ஆலோசனை
சட்டசபை இன்று கூடவுள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நேற்று திமுக எம்எல்ஏ -க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
சென்னை: சட்டசபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 16-ஆம் தேதி நடைபெற்றது. அன்று நிதி அமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபையை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்தனர்.
2017-18-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும் 2016-17-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படாமலேயே கூட்டத் தொடரை முடித்து விட்டதால் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற அந்த தீர்மான நகலை சபாநாயகர் தனபாலிடம் திமுகவினர் அளித்தனர். இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டப்படாமலேயே இருந்தநிலையில், சட்டசபையை கூட்டினால் பெரும்பான்மையை இழந்துவிடுவோம் என்ற அச்சம் எடப்பாடி அரசுக்கு உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டசபை பேரவைச் செயலாளராக இருந்த ஜமாலுதீன் ஓய்வு பெற்றதை அடுத்து, பூபதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சட்டசபை மானியக் கோரிக்கைகள் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே கூவத்தூரில் பணம் குதிரை பேரம் நடைபெற்றதாக தனியார் தொலைகாட்சி வீடியோ வெளியிட்டது. இந்நிலையில் இன்று சட்டசபை கூடுகிறது. அப்போது எம்எல்ஏ-க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.