சட்டசபையில் தொடர் அமளி... திமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
சென்னை: சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என திமுக உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் கடந்த 25ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இதில், அதிமுக சட்டசபை உறுப்பினர்களும், திமுக உறுப்பினர்களும் மாறிமாறி குற்றம் சாட்டியில் அமளியில் ஈடுபடுவதால் சபையின் நேரம் வீணடிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த ஜூலை 27ம் தேதி, பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தின் போது, திமுக உறுப்பினர் சங்கரபாணி சத்துணவு திட்டம் தொடர்பாக பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து, திமுகவினர், அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, சபாநாயகர் தனபால் , 'திமுக உறுப்பினர்கள் இதுபோல் தொடர் அமளியில் ஈடுபட்டால், எனக்குள்ள அதிகாரத்தின்படி நான் நடவடிக்கை எடுப்பேன்' என்று அப்போது எச்சரித்தார்.

மானியக்கோரிக்கை விவாதம்
மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது. அப்போது, திமுக உறுப்பினர்கள் தினசரியும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டசபையில் நேற்று வனம், சட்டம், நீதி, சிறைச்சாலைகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

திமுக உறுப்பினர் பேச்சு
சட்டசபையில் இன்று திமுக உ.றுப்பினர் திராவிட மணி, ரேசன், பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் மற்றும் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் பதில் அளித்தனர். தொடர்ந்து பேசிய, திராவிட மணி, நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த விவகாரம் குறித்து பேச ஆரம்பித்தார்.

அவை குறிப்பில் இருந்து நீக்கம்
ஆனால், அதை அவைக்குறிப்பிலிருந்து, சபாநாயகர் நீக்குவதாக உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால் . திராவிட மணிக்கு போதுமான நேரம் ஒதுக்கப்பட்டு விட்டது. எனவே, அவர் அமர வேண்டும் எனக் கூறி அதிமுக உறுப்பினர் ஏ.ராமுவை (குன்னூர்) பேச அழைத்தார்.

திமுகவினர் எதிர்ப்பு
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். திமுக கொறடா அர.சக்கரபாணி எழுந்து, திராவிடமணிக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திராவிட மணி நன்றி சொல்லி பேச வாய்ப்பு கொடுங்கள் என்று கொறடா சக்கரபாணி உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

சபாநாயகர் மறுப்பு
அதை ஏற்காத சபாநாயகர், அவருக்கு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் 40 நிமிடங்களுக்குமேல் பேசிவிட்டார். குறுக்கீடுகளும் அதிகம் இல்லை. எனவே, இனியும் நேரம் ஒதுக்க முடியாது. பேரவையை நடத்த நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

கை நீட்டி பேசுவதா?
அதைத் தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார் சபாநாயகரை கை நீட்டி பேசினார். சபாநாயகர் உட்காரச் சொன்னார். ஆனால், அவர் அமரவில்லை. உடனே, நந்தகுமாரைப் பார்த்து, 'உங்களுக்குப் பயந்து கொண்டு நான் இருக்கவில்லை. கைநீட்டி பேசாதீர்கள். அடுத்தமுறை இதுபோல், பேசினால் நான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார். மேலும், எழுந்துநின்று பேசிய மற்ற திமுக உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

நான் பயப்படமாட்டேன்
திமுக உறுப்பினர்கள் சிலர் விதிகளை மதிக்காமல் வேண்டுமென்றே கோஷமிடுகின்றனர். பேரவைத் தலைவர் உத்தரவை மதிக்காமல் அமளியில் ஈடுபடுகின்றனர். நான் யாருக்கும் பயப்படவில்லை. இனியும் இதுபோல நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications