வர்தா புயல் பாதிப்பு.. மத்தியக் குழுவை சந்திக்க திமுகவிற்கு அனுமதி மறுப்பு
வர்தா புயல் பாதிப்புக் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்தியக் குழுவை தலைமைச் செயலகத்தில் சந்திக்க திமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வர்தா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள பிரவீன் வசிஷ்டா தலைமையிலான மத்தியக் குழுவை தலைமைச் செயலகத்தில் திமுக எம்எல்ஏக்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இம்மாதம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்தது வர்தா புயல். எந்தெந்தப் பகுதியில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்ய பிரவின் வசிஷ்டா தலைமையில் மத்தியக் குழு ஒன்று சென்னை வந்துள்ளது. இந்தக் குழு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய உள்ளது.
முன்னதாக, இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் மத்தியக் குழுவை சந்திக்க தலைமைச் செயலகம் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே நுழைய காவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் திமுக எம்எல்ஏக்களுக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட வருகிற மத்தியக் குழுவினரை திமுகவின் எம்எல்ஏக்கள் சந்தித்து மனுக்களைக் கொடுப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அரசின் சார்பில் அந்தக் கோரிக்கை இதுவரை செவிமடுக்கப்படவில்லை.
அதே போல், இந்தக் கூட்டத்தை நடத்துகிற மத்தியக் குழுவினரை சந்தித்து சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கோரிக்கை மனுக்களாக தருவதற்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. 2 நாட்களாக விடுக்கப்பட்டக் கோரிக்கை அரசின் சார்பில் பரிசீலிக்கப்படாததால் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான கோரிக்கைகளை 13 எம்எல்ஏக்கள் இன்று நேரடியாக கொண்டு வந்து மத்தியக் குழுவிடம் தர வந்தோம்.
அந்தக் குழுவினர் காலை 10 மணிக்கு முதல்வரை சந்திக்க வருகிறார்கள் என்ற செய்தி அறிந்து, முதல்வருடன் இருக்கும் போதே அந்தக் குழுவைச் சந்தித்து சென்னையில் ஏற்பட்டிருக்கிற பாதிப்புகள் குறித்து விளக்கலாம் என்ற வகையில் 13 எம்எல்ஏக்களும் வந்தோம். முதல்வர் அறைக்குள் இருந்த மத்தியக் குழுவினரை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அலுவலர்களை தனியாக வேறு இடத்தில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்திருக்கிறோம். சென்னையை பொருத்தவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான மின்விளக்கு கம்பங்களும், உயரழுத்த மின்விளக்கு கம்பங்களும் அடியோடு சாய்ந்து பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது. நூற்றுக்கணக்கான மின்மாற்றிகள் பழுதடைந்திருக்கின்றன. பல ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளும், கூரைகளும் பிய்த்தெறியப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை திமுக சார்பில் மனுக்களாக இன்று மத்தியக் குழுவை தனியாக சந்தித்துக் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மனுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று மா. சுப்பிரமணியன் கூறினார்.