அரசு விழாவில் பங்கேற்க வந்த திமுக எம்எல்ஏக்கள் 3 பேர் கைதாகி விடுவிப்பு.. புதுக்கோட்டையில் பரபரப்பு
புதுக்கோட்டை: அரசு விழாவில் பங்கேற்க சென்ற திமுக எம்எல்ஏக்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன்அரசு, ரகுபதி, சிவ மெய்யநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவுக்கான அழைப்பிதழில் திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன்அரசு, ரகுபதி, சிவ மெய்யநாதன் ஆகியோரின் பெயர்கள் படத்துடன் இடம் பெற்றிருந்தது.
விழாவில் பங்கேற்குமாறு புதுக்கோட்டை வட்டாட்சியர் நேரில் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கரும் திமுக எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என போனில் அழைப்பு விடுத்துள்ளார்.
தடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள்
இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன்அரசு, ரகுபதி, சிவ மெய்யநாதன் ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க சென்றுள்ளனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரச்சனை ஏற்படும்..
திமுக எம்எல்ஏக்கள் வந்தால் நிகழ்ச்சிக்கு வந்தால் பிரச்சனை ஏற்படும் என காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என எம்எல்ஏ ரகுபதி கூறியுள்ளார். எந்த தவறும் செய்யாத போது கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும் அவர் கூறினார்.
காவல்துறையினர் மறுப்பு
ஆனால் இதனை மறுத்துள்ள காவல்துறையினர் பிருந்தாவன் சாலை சந்திப்பில் திமுக எம்எல்ஏக்கள் மறியலில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். இதனாலேயே அவர்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் பொய் சொல்றாங்க
முதல்வர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் கைது செய்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் பொய்க்கூறுவதாக திமுக எம்எல்ஏவான பெரியண்ணன் அரசு கூறியுள்ளார்.
எம்எல்ஏக்கள் விடுவிப்பு
விழாவுக்கு அழைத்தது போல் அழைத்து கைது செய்துவிட்டதாக திமுக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தவறான செயலில் ஈடுபடாதபோது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கைது செய்துள்ளதாகவும் திமுக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாலையில் எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோரை போலீசார் விடுவித்துள்ளனர்.