காவிரி, சிறுவாணி அணை விவகாரம் குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு- திமுக வெளிநடப்பு
சென்னை: காவிரி, சிறுவாணி பிரச்சனை தொடர்பாக எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட திமுக கோரியதற்கு எடப்பாடி பழனிச்சாமி உரிய பதில் தராததால் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 79 பேர், ஒரு வார காலத்திற்குப் பின்னர் இன்று சட்டசபைக்கு வந்தனர்.
தமிழக சட்டசபை கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வெளியே எப்போதும் இல்லாத அளவுக்கு ஏன் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது என்று, சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினர். இதற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.
காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கி கேள்வி நேரம் முடிந்தவுடன், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போது அவர், சிறுவாணி ஆற்றில் கேரளா அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்குக் கண்டனத்தை தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், சிறுவாணி, காவிரியாறு பிரச்னை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.
இந்தப் பிரச்னை தொடர்பாகப் பிரதமரைச் சந்தித்து, கேரளாவுக்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி வலியுறுத்த வேண்டும். இன்று அனைத்துக்கட்சி விவசாயிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளும்கட்சி தவிர அனைத்துக்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. எனவே, இந்தப் பிரச்சினை தொடர்பாக, அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும். மேலும், சிறுவாணி ஆற்றில் கேரளா அரசு அணைகட்டுவதை எதிர்த்து பேரவையில் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி உள்ளிட்ட நதிநீர்களை தமிழ்நாட்டிற்குப் பெறுவதில், முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். மேலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டு வருகின்றார் என்று தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின்னர், அவைக்கு வெளியே, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 1000 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 100 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவசாயிகளின் போராட்டம், அதிமுக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் போராட்டத்திற்கு, வணிகர்களும் மற்றும் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. சட்டமன்றம் நடைபெற்று கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், அந்த விவசாயி பெருங்குடி மக்களின் போராட்டத்திற்கு, ஆதரவளிக்கின்ற வகையில், அவையில் நடைபெறக் கூடிய நடவடிக்கைகளையாவது ஒத்திவைத்துவிட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தேன்.
அதேபோல், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணையைக் கட்டக்கூடிய அந்த நிலையை, உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். அணை கட்டுவதற்கு, மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும். சிறுவாணியில் அணை கட்டும் நடவடிக்கையால், திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளும் பொதுமக்களும் பெரும்பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
எனவே, அதிலிருந்து அவர்களை மீட்டுவர வேண்டும் என்று சொன்னால், உடனடியாக இதைத் தடுத்து நிறுத்திட வேண்டிய முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட வேண்டும். அதற்கு மத்திய அரசை மாநில அரசு வற்புறுத்த வேண்டும் என்ற வகையிலே நான் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலமாக எடுத்து வைத்தேன்.
கேரளா, ஆந்திர மாநிலத்தில், அரசியலை மறந்து, கட்சிகளை மறந்து, எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, எப்படி மத்திய அரசை வற்புறுத்துகிறார்களோ. அதேபோல் தமிழகத்திலும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஏற்கனவே சொல்லிக் கொண்டிருக்கிற பதில்களைதான் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, நாங்கள் எடுத்து வைத்த கோரிக்கைகளுக்கு, அவர் சரியான விளக்கம் தராத காரணத்தால், அதைக் கண்டிக்கின்ற வகையிலே நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
தொடர்ந்து, அவையிலே, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. அதில் நாங்கள் கலந்து கொண்டு, எங்கள் உறுப்பினர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். நாங்கள் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முக்கிய பிரச்னைகளில் அமைச்சரின் பதில் உரிய முறையில் இல்லை என காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முக்கிய பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினால் கடிதம் எழுதியிருப்பதாகவே பதில் தருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.