வரலாற்றிலேயே முதல்முறையாக... திமுகவிடம் 4 தொகுதிகளை குறைத்து கொடுக்க சொன்ன விஜயகாந்த்
சென்னை: தேர்தல் களத்தில் கூடுதல் தொகுதிகளுக்காக கூட்டணிகளே முறிந்த நிகழ்வுகளை 'சரித்திரம்' பார்த்திருக்கிறது... ஏன் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்த நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கிறது... ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 63 தொகுதிகள் வேண்டாம், 'ராசி' அடிப்படையில் 4-ஐ குறைத்து 59 தொகுதிகள் கொடுத்தால் போதும் என சொல்லியிருக்கிறாராம் விஜயகாந்த்.
திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா? வராதா? என்ற மிக நீண்ட இழுபறிக்கு கடந்த சில நாட்களாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் அதை விஜயகாந்த் தரப்பு ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக 150; காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக- தேமுதிக கூட்டணியை உறுதி செய்ததில் சன் குழும அதிபர் கலாநிதி முக்கியப் பங்கு வகித்ததாகவும் அவர்தான் இக்கூட்டணியை உறுதி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் கலாநிதி மாறன் -விஜயகாந்த் சந்திப்பின் போது கடந்த 2011 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது போல 63 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் கலாநிதி மாறன், சரி 63 தொகுதிகளை நான் உறுதியாகப் பெற்று தருகிறேன் என கூற விஜயகாந்த்தும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட, அவர் அதிர்ச்சி அடைந்து எப்படி இத்தனை தொகுதிகளை ஒதுக்க முடியும் எனக் கேட்டிருக்கிறார். ஆனால் கலாநிதியோ, கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டுமெனில் இத்தனை தொகுதிகளைக் கொடுத்தாக வேண்டும் என கறாராக சொல்ல, ஸ்டாலினும் ஆமோதிக்க வேறுவழியின்றி அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக மறுநாள் திமுக தரப்பை விஜயகாந்த்தின் தூதர் ஒருவர் சந்தித்திருக்கிறார்.
அந்த சந்திப்பில், ஜோதிடர் ஆலோசனைப் படி விஜயகாந்த்துக்கு 63 தொகுதிகள் என்பது ராசியில்லையாம்; ஆகையால் 4 தொகுதிகளைக் குறைத்து 59 தொகுதிகளை தேமுதிக வைத்துக் கொள்கிறதாம்; அதில் தான் ராசி எண் 5 வருகிறது என சொல்ல இன்ப அதிர்ச்சியாம் திமுகவுக்கு..
இப்படியும் நம்பிக்கைகள்!