திமுக உயர்நிலைக்குழு டிச. 29ல் கூடுகிறது- ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு!
திமுக உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் டிசம்பர் 29ல் நடைபெற உள்ளது.
சென்னை : திமுக உயர்நிலைக்குழுக்கூட்டம் வருகிற டிசம்பர் 29ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இக் கூட்டத்தில் திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவின் மறைவையொட்டி காலியான அவரது ஆர்.கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோரை பெருவாரியான வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில், திமுகவிற்கு மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. இத்தனை கட்சிகளின் ஆதரவு இருந்தும், 2ஜி வழக்கு தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக வெளியாகியும் திமுகவிற்கு மூன்றாவது இடமே கிடைத்து உள்ளது.
இந்நிலையில், திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் வருகிற டிசம்பர் 29ம் தேதி மாலை சென்னையில் கூடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அழைப்பு விடுத்து உள்ளார். இந்த கூட்டத்தில் ஆர்.கே நகர் தேர்தல் தோல்வி குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications