உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளை மாற்ற வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
சென்னை: உளவுத்துறை ஐஜி சத்யமூர்த்தி, உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா உள்ளிட்டோரை இடமாற்றம் செய்யக் கோரி திமுக சார்பில் தேர்தல் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். தேர்தல் ஆணையமும் பணப்பட்டுவாட உள்ளிட்ட விதிமுறைகளை மீறுவோர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்நிலையில் திமுக சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அக்கட்சியின் சட்டப் பிரிவு இணை செயலாளர் பரந்தாமன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் முதலமைச்சர் தொகுதி உட்பட அனைத்து அமைச்சர்கள் தொகுதிகளிலும், பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படும் ஆர்டிஒ, தாசில்தார் ஆகியோர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்தல் பணிகள் அல்லாத துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல், உளவுத்துறை ஐஜி சத்யமூர்த்தி, உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கும் சேலம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications