அப்துல்கலாம் மறைவையொட்டி தி.மு.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைப்பு.. தலைமைக் கழகம் அறிவிப்பு
சென்னை : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இறுதிச் சடங்கை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி வரை நடைபெற இருந்த தி.மு.க. நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அப்துல்கலாம் உடல் புதன் கிழமை (29-07-2015) ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு அங்குள்ள பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. வரும் 30 ஆம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழக அரசு 30 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்துல் கலாம் மறைவையொட்டி தி.மு.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் போரூர் நாற்சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உயர்மட்ட மேம்பாலப் பணிகளை உடனே தொடங்கவும், போரூர் ஏரியை அகலப்படுத்த வலியுறுத்தியும் நாளை (29-07-2015) நடைபெற இருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அந்த ஆர்ப்பாட்டம் வரும் 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் தி.மு.க. அறிவித்துள்ளது.