தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு கருணாநிதி, ராமதாஸ் வாழ்த்து!
சென்னை: தெலுங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இன்று முதல்வராக பொறுப்பேற்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்களுடைய சிறந்த செயல்பாடுகளும், கடின உழைப்பும், உங்களை மக்களுடன் மிக நெருக்கமாக கொண்டு சென்றுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு நீங்கள் சென்னை வந்தபோது தனித் தெலுங்கானா அமைப்பது குறித்து நீங்கள் என்னுடன் ஆலோசனை செய்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
அதன்படி நீங்கள் உங்கள் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளீர்கள். உங்களின் சிறப்பான தலைமை மற்றும் நிர்வாகத்தின் கீழ் புதிய தெலுங்கானா மாநிலம் அமைதியானதாக திகழும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. உங்களுக்கும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினருக்கும் திமுக சார்பில் மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல டாக்டர் ராமதாஸ் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள தங்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற தனித் தெலுங்கானா போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் ஒருவன் நான் என்ற முறையில் தனித் தெலுங்கானா இன்று மலர்ந்திருப்பதிலும், அதன் முதலமைச்சராக எனது நண்பரான தாங்கள் பதவியேற்றிருப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதில் எவ்வாறு வெற்றி பெற்றீர்களோ, அதேபோல் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் அம்மாநிலத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதிலும் வெற்றி பெறுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
முதலமைச்சராக பதவியேற்றுள்ள உங்களுக்கும், அமைச்சரவை சகாக்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.