நாங்க ஆட்சிக்கு வந்தா கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் இருக்காது: சொல்கிறார் மு.க ஸ்டாலின்
கோவை: தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் அமைய ஆதரவு கொடுங்கள். கரப்ஷன், கலெக் ஷன், கமிஷன் இல்லாத நிர்வாகத்தை தி.மு.க., அளிக்கும் என்று கோவையில் நடந்த விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
நமக்கு நாமே திட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று மாலை கோவை மாவட்டம் சூலுாரில், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பழனிசாமி பேசுகையில், "விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தை, 500ல் இருந்து, 1000 யூனிட்டாகவும், 10 எச்.பி., சலுகையை, 15 எச்.பி.,யாகவும் உயர்த்த வேண்டும். சூரிய மின்சக்தியில் விசைத்தறிகளை இயக்க, 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். சோமனுாரில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும்," என்றார். தொடர்ந்து, கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆட்சியில் இல்லை
தற்போது, திமுக ஆட்சியில் இல்லை; சட்டசபையில் எதிர்கட்சியாகவும் இல்லை. ஆனாலும், எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை, இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தாலே அறிய முடிகிறது. தமிழகத்தில் செயல்படாத ஆட்சி நடக்கிறது. நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. திமுக ஆட்சியில், வரி விதிப்பது குறித்து, தொழிலதிபர்களுடன் பேசி முடிவு செய்யப்படும்.

சந்திக்க முடியவில்லை
இந்த ஆட்சியில், அமைச்சர்களை கூட சந்திக்க முடியவில்லை என, அனைத்து தரப்பினரும் புலம்பும் நிலை உள்ளது. மக்களை தேடி அரசியல்வாதிகள் வந்தால், பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். பல திட்டங்களை நிறைவேற்றியதால் தான், நாங்கள் துணிச்சலுடன் மக்களை சந்திக்க வருகிறோம்.

நெசவாளர் பிரச்சினை
2004ல் சென்வாட் வரியை நீக்கினோம். நெசவாளர்களின் பிரச்னையை தீர்க்க, 1998ல் அரசு செயலாளர் தலைமையில் குழு அமைத்து, 24 கோரிக்கைகளை நிறைவேற்றினோம். இலவச மின்சார சலுகையால், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் பல லட்சம் பேர் பயன்பெற்றனர்.

வெள்ளை அறிக்கை
இந்த ஆட்சியில் வெறும் அறிவிப்புகள் மட்டும் வெளியாகின்றன; செயல்பாடுகள் இல்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 2.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாக கூறுகின்றனர்.இது குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை வெளியிட கோரியும் பலனில்லை.

கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன்
திமுக ஆட்சி அமையும் பட்சத்தில், விசைத்தறி, கைத்தறி தொழில் மேம்பட புதிய தொழில்நுட்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் அமைய உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் இல்லாத நிர்வாகத்தை திமுக அளிக்கும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications