எடுபடாமல் போன ஸ்டாலின் ‘பாட்டு’... யாரையும் விமர்சிக்காத ஜெ.வின் பேச்சை ரசித்த மக்கள்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம், திமுகவினரின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினின் பிரச்சாரத்தை மக்கள் ரசிக்கவில்லை போலும்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை நிலவரப்படி அதிமுக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் அக்கட்சியின் வெற்றி உறுதியாகி இருப்பதாகவே கருதப்படுகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை தேர்தலுக்கு முன்னதாகவே நமக்கு நாமே என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை 234 தொகுதிகளிலும் மேற்கொண்டார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.
அப்போது அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்த ஸ்டாலின், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, அந்தக் குறைகளைச் சுட்டிக் காட்டி, அவற்றை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
கூடவே தனது பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாலர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின். ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே' உட்பட பாடல்களையும் பாடி ஜெயலலிதாவை அவர் விமர்சித்தார்.
ஜெயாவை நினைச்சாலே பாட்டுப் பாடனும்னு தோணுது என்றும் அவர் பேசினார். ஆனால், இது எதையும் மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது தற்போது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதற்கு மாறாக, மற்ற கட்சித் தலைவர்களை அதிகம் விமர்சிக்காமல், தனது சாதனைகளை மட்டுமே பட்டியலிட்டு வாக்கு சேகரித்த ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
‘மக்களுக்காக நான், மக்களால் நான்' என்ற வார்த்தைகள் மக்கள் மனதில் எந்தளவுக்கு ஆழ பதிந்துள்ளது என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications