ஸ்டாலின் பிறந்தநாளுக்காக 3 நாள் லீவு... மீண்டும் தொடங்கியது திமுக நேர்காணல்
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்காக மூன்று நாட்கள் விடுமுறை முடிவடைந்த நிலையில், நேற்று மீண்டும் அக்கட்சியின் நேர்காணல் தொடங்கியது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஆயத்தப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அந்தவகையில், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது.

சென்னை அறிவாலயத்தில் கடந்த மாதம் 22ம் தேதி இந்த நேர்காணல் தொடங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மை செயலர் துரைமுருகன் ஆகியோர் நேர்காணல் நடத்துகின்றனர்.
முதல் ஆறு நாட்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நீலகிரி, ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், புதுக்கோட்டை, பெரம்பலுார் ஆகிய மாவட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.
பின்னர் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும், இரண்டாவது கட்ட நேர்காணல் நேற்று முன்தினம் துவங்கியது. அப்போது திருச்சி, அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டது.
நேர்காணலின் 8வது நாளான நேற்று நேற்று, 8வது நாளாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதுார், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய, எட்டு தொகுதிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்த, 137 பேரிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் இந்த நேர்காணல் வரும் 7ம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications