உதவி எண்ணைக் கொடுத்ததோடு நில்லாமல் வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களைக் காப்பாற்றி உதவிய திமுகவினர்
சென்னை: மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இரு உதவி எண்களை வழங்கிய திமுக அத்தோடு நில்லாமல், தனது கட்சியினரையும் களத்தில் இறக்கி உதவி கேட்டு அழைத்தவர்களைத் தேடிப் போய் உதவி செய்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் தத்தளித்த போது வெள்ள நீரில் சிக்கி்த் தவிப்போர் வசதிக்காக இரு உதவி எண்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். மழை வெள்ளத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்டோர் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு அழைத்தால் திமுகவினர் மீட்புப் பணிக்கு ஓடிவருவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பலரும் அந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். அவர்களுக்கு திமுகவினர் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்தனர்.
ஆயிரக்கணக்கில் உதவி கேட்டு அழைப்புகள் வந்ததாம். அவர்களிடம் முகவரி, அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினை உள்ளிட்டவற்றைக் கேட்டுக் கொண்டு, அந்தந்த பகுதி செயலாளர்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் கட்சியினருடன் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிந்துள்ளனர்.
இந்த மீட்பு முயற்சியின்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்துள்ளன. கர்ப்பிணி ஒருவரை மீட்ட திமுகவினர் அப்பெண்ணின் விருப்பப்படி அவரை சொந்த ஊரான கரூருக்கு அனுப்பி வைத்தனராம்.
இந்த உதவிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.