திமுக மூத்த தலைவர் என்.பெரியசாமி மரணம்... மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி - வீடியோ
திமுகவின் மூத்த தலைவரும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான என்.பெரியசாமி சென்னையில் இன்று காலமானார். அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: திமுகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
திமுகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளரக கடந்த 30 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த என்.பெரியசாமி, கருணாநிதியால் 'முரட்டு பக்தர்' என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவர் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தார்.
கடந்த 89 மற்றும் 91 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்ததால் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிசிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு. க ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், ஆ.ராசா, கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது மு.க. ஸ்டாலின் கூறுகையில், கட்சியின் மூத்த மாவட்ட செயலாளர் இழப்பு துத்துக்குடி திமுகவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவுக்கும் ஈடு செய்ய முடியாதது என்று கூறினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர்,'எங்களது நட்பு 26 ஆண்டு கால நட்பு. அவரது வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அவர் என்னை அன்போடு உபசரித்துள்ளார்' என கூறினார். என்.பெரியசாமியின் பூத உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.