சட்டசபையில் 'கருப்புத் துண்டுடன்' தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்- வழக்கம் போல வெளிநடப்பு!!
சென்னை: தமிழக சட்டசபையில் தாங்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புத் துண்டு அணிந்து வந்திருந்தனர். காவல்துறை மானியத்துறை மீதான கோரிக்கையின் மீது முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு விளக்கம் அளிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வழக்கம் போல தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக இந்த விவாதத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்புத் துண்டு அணிந்திருந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், முக்கிய பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு இதுவரை சட்டசபையில் பதில் சொல்லவில்லை. எனவே இன்று காவல்துறை மானிய கோரிக்கையை கண்டித்து கருப்பு துண்டு அணிந்து வந்துள்ளோம் என்றனர்.
பின்னர் சட்டசபையில் தி.மு.க. சார்பில் எ.வ.வேலு பேசினார். அப்போது சட்டம் - ஒழுங்கு குறித்து சில பிரச்சனைகளை அவர் எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது என்று பதிலளித்தார்.
அத்துடன் இப்போதைய ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று தி.மு.க. கருதினால் தி.மு.க. அல்லது தி.மு.க. வழக்கறிஞர் அணி ஏற்கனவே இது குறித்து ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டு வழக்கு தாக்கல் செய்ய தயாரா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சவால் விடுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முதல்வரின் இந்த பேச்சைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்க தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று தி.மு.க.வினர் எழுந்து நின்றனர். ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதை கண்டித்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சபைவளாகத்தில் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பது குறித்து எ.வ.வேலு பேசினார். அதற்கு முதல்வரால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே தமிழக போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்று பேசி இருக்கிறார். இது அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.
இதுபற்றி உறுப்பினர் பேசினால் தி.மு.க. ஆட்சியில் நீதிமன்ற வளாகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். சுப்பிரமணியசாமிக்கு எதிராக வன்முறை நடந்தது என்று முதல்வர் கூறுகிறார். அ.தி.மு.க. ஆட்சியின் போது சுப்பிரமணியசாமிக்கு எதிராக மோசமான வன்முறை நடந்தது. தி.மு.க. ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் மோதல் நடந்தது என்று மாறி, மாறி பேசுவதை விட்டுவிட்டு சட்டம் - ஒழுங்கு நிலைமை பற்றி முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
ஆனால் எங்கள் தலைவர் கருணாநிதிக்கு சவால் விடுத்து பேசியதால் அதற்கு விளக்கம் அளிக்க எழுந்தோம். சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications