நவீன தொழில்நுட்பத்துடன் தி.மு.க. இணையதளம்..கருணாநிதி தொடங்கி வைத்தார்...
சென்னை : நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளத்தை (http://dmk.in/tamil/) அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் தி.மு.கழகம் தன்னை இணைத்துக்கொண்டதுடன், தமிழ்ச் சமுதாயத்திற்காகவும், நாட்டு மக்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தொடர்ச்சியாக பாடுபட்டு வருகிறது. 1998ஆம் ஆண்டு முதல் தி.மு.கழகத்திற்கென பிரத்யேக இணையதளத்தை (www.dmk.in) துவக்கியது.
இந்தியத் திருநாட்டில் உள்ள மாநில அரசியல் கட்சிகளில் முதன்முதலில் இணையதளத்தை துவக்கியது தி.மு.கழகம் தான். அதுபோல தமிழக அரசியல் கட்சிகளில் முதன்முதலில் இணையதளத்தைத் துவக்கியதும் தி.மு.கழகம் தான்.
புது ஊடகம் என்றழைக்கப்படும் சமூக வலைதளங்களான முகநூலிலும் (www.facebook.com/arivalayam) ட்விட்டரிலும் (www.twitter.com/arivalayam) தி.மு.கழகம் தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப தி.மு.கழகம் தன்னை தகவமைக்கும் பொருட்டு, தி.மு.கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில் கழகத்தின் இணையதளத்தினை பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய புதிய இணைய தளமாக உருவாக்கி, அதனை இன்று 9.7.2015 (வியாழக்கிழமை) சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் கழகத்தின் வரலாறு, கொள்கைகள், கழக அமைப்பு, தலைமைக் கழகம், மாவட்ட நிர்வாகிகள், அணிகள் மற்றும் குழுக்களின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் அறிக்கைகள், கழக ஆட்சியின் சாதனைகள், செய்தி வெளியீடுகள், நிழற்பட தொகுப்புகள், காணொளித் தொகுப்புகள், சமூக வலைதளப் பதிவுகள், கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது வலைதள தொடர்புகள்.
தமிழ் இலக்கணம், கருணாநிதியின் விளக்க உரையுடன் திருக்குறள், கழகத்தினரும், பொதுமக்களும் அவர்களது கருத்துக்களை, புகார்களை, கேள்விகளை தெரிவிக்கும் வசதி, இணையம் வாயிலாக கழகத்தில் உறுப்பினராகும் வசதி, கழகத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற்றிடும் வசதி உட்பட பல்வேறு சேவைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தளத்தில் உள்ளன.
இவ்வாறு தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications