கனிமொழி, ராசா, தயாநிதியை ஒதுக்கக் கோரிய கலியாணசுந்தரம் திமுகவில் இருந்து சஸ்பென்ட்!
சென்னை: கனிமொழி, ஆ. ராசா மற்றும் தயாநிதியை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அக்கட்சி அமைப்புச் செயலர் கலியாணசுந்தரம் முன்வைத்த கோரிக்கையை திமுக நிராகரித்துள்ளது. மேலும் கலியாணசுந்தரம் கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் திமுக அறிவித்துள்ளது.
திமுகவின் அமைப்புச் செயலராக இருந்த மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான பெ.வீ. கலியாணசுந்தரம் திடீரென்று தமது பதவியை ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா கடிதத்துடன் திமுக தலைவர் கருணாநிதிக்கு 5 கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தார்.

அதில் திமுகவில் இருந்து கனிமொழி, ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறனை ஒதுக்கி வைக்க வேண்டும்; மு.க.ஸ்டாலினை திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கைகள். இதேபோல் நில அபகரிப்பு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவர்களுக்கு கட்சி பதவிகள் வழங்கக் கூடாது என்றும் கலியாண சுந்தரம் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் இந்த கோரிக்கைகள் எதனையுமே ஏற்க திமுக மறுத்துவிட்டது. அத்துடன் பெ.வீ. கலியாணசுந்தரத்தை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
திமுகவில் இதுநாள் வரை மு.க.அழகிரி ஆதரவாளர்கள்தான் நீக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கட்சியின் அடுத்த தலைவராக கருதப்படும் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் ஒருவரும் நீக்கப்பட்டுள்ளது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications