திமுகவில் தொடரும் களையெடுப்பு: வேலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜ் நீக்கம்
சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வி எதிரொலியாக திமுகவில் கடந்த சில நாட்களாக கட்சிக்குள் நிர்வாகிகள் மாற்றம், நிர்வாகிகள் நீக்கம் உள்ளிட்ட களையெடுப்புக்கள் நடந்து வருகிறது. கட்சியைப் பலப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ம.முத்தமிழ்ச் செல்வி, வேலூர் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன.
குறைந்த வாக்கு வித்தியாசம்
100க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும், 100 முதல் 1,000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் எட்டு தொகுதிகளிலும், 1,000 முதல் 5,000 வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் 21 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது
உள்ளடி வேலை
சட்டசபைத் தேர்தலுக்கு பின்னர் கடந்த மே 24ஆம் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், போட்டியிட்ட வேட்பாளர்கள், வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதில், தேர்தலில் தோற்ற வேட்பாளர்கள் பலர், உட்கட்சி பூசலாலும், பல உள்ளடி வேலைகளாலும்தான் தோற்றோம் என்று செயற்குழுவில் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
புகார் வாசித்த வேட்பாளர்கள்
தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பலரும் கருணாநிதி, ஸ்டாலினிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர். தொண்டர்களும் உள்ளடி வேலை செய்த நிர்வாகிகள் பற்றி கட்சி தலைமைக்கு புகார் கடிதங்களையும் அனுப்பினர்.
திமுகவில் களையெடுப்பு
இதன்பிறகு, திமுகவில் களையெடுப்பு படலம் தொடங்கியது. கடந்த 10ஆம் தேதி அன்று, கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.வீரகோபால், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செ.காந்திச்செல்வன், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.கி.துரைராஜ் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் சில நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ம.முத்தமிழ்ச் செல்வி, வேலூர் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நிர்வாகிகள் நீக்கம்
வெள்ளிக்கிழமையன்று பட்டுக்கோட்டை நகர முன்னாள் செயலர் சீனி.அண்ணாதுரை, சீனி.இளங்கோ, மாவட்ட மாணவர் அணித் துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.பி.ராஜா (எ) மணிமாறன், ஆர்.எஸ்.பிரகாஷ் (எ) தனியரசு ஆகியோர் நீக்கப்பட்டனர்.
கொலை பின்னணி
பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராகவும், நகர்மன்ற 9ஆவது வார்டு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்த த.மனோகரன், 60 கொலை செய்யப்பட்ட பின்னணியில்தான் அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடரும் நிர்வாகிகள் நீக்கம்
இதுகுறித்து மனோகரனின் அண்ணன் மகன் பாரிவேல் கார்த்தி, பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் ஸ்டாலின், மனோகரன் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சில நிர்வாகிகள் நீக்கப்படலாம் என்றும், பதவி பறிக்கும் நடவடிக்கைகள் தொடரலாம் என்றும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications