காவிரிக்காக நாளை அனைத்து கட்சி கூட்டம்.. மு.க.ஸ்டாலின் தகவல்.. ஜெ. நினைவு மண்டபத்திற்கு எதிர்ப்பு
Recommended Video

சென்னை: உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஊழலில் திளைத்துக் கொண்டிருப்பவர்கள் நினைவு மண்டபம் அமைக்கிறார்கள் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்தார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

ஸ்டாலின் கூறியதாவது: தமிழக மாணவர்கள் காப்பியடிப்பதில் தீவிரமானவர்கள் என்பதை போல கொச்சைப்படுத்தி, நீட் தேர்வின்போது அவர்களை அவமானப்படுத்தும் வகையில் சோதனையிட்டுள்ளனர். இந்த சோதனையை கண்டு பெற்றோர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் வேதனையில் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள்.
சிபிஎஸ்இ இதையெல்லாம் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும், தனது செயல்பாடுகளுக்காக தமிழக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.சிபிஎஸ்இ வாரியத்தின் இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்களிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி, டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய மத்திய அரசு, கண்டும் காணாமல் இருக்கின்றது. இதை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம். நாளை காவிரி பற்றி ஆலோசிக்க திமுக சார்பில் சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, அவர்தான் முதல் குற்றவாளி எனவும் அறிவிக்கப்பட்டார். அவருக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஊழலில் திளைத்துக் கொண்டிருப்பவர்கள், ஊழல் செய்து சிறைக்கு சென்றவருக்கு தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டுகிறார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனிடையே, கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துள்ளதை விமர்சனம் செய்து ஸ்டாலினுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில்,
கர்நாடக அரசு..தமிழகத்திற்கு..தண்ணீர்தரமுடியாது...என்றுசொன்னதை சிறிதும்கண்டிக்காத...ஸ்டாலின்..மற்றும்மற்றவர்களின்..முகத்திரை..தெளிவாக்க்கிழித்தெறியப்படுகிறது.....கூட்டணிக்கட்சியைக்..கண்டிக்கும்..தெம்பும்..திராணியும்..இல்லாது...சர்வக்கட்சி..கூட்டம்கூட்டுவது..அப்பட்டமான நாடகம்..
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 7, 2018
.
கர்நாடக அரசு..தமிழகத்திற்கு..தண்ணீர்தரமுடியாது...என்றுசொன்னதை சிறிதும் கண்டிக்காத...ஸ்டாலின்..மற்றும் மற்றவர்களின்..முகத்திரை..தெளிவாக்க்கிழித்தெறியப்படுகிறது.....கூட்டணிக்கட்சியைக்..கண்டிக்கும்..தெம்பும்..திராணியும்..இல்லாது...சர்வக்கட்சி..கூட்டம்கூட்டுவது..அப்பட்டமான நாடகம்.. இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழிசை விமர்சனத்திற்கு ஸ்டாலின் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications