அனைத்துக் கட்சி டெல்டா விவசாயிகளின் ஆக. 19 முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு!
சென்னை: கர்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெற்று டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை உறுதி செய்திட வலியுறுத்தி, வரும் ஆக.19-ந் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெற்று டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை உறுதி செய்திட வலியுறுத்தி, வருகிற 19-8-2016 வெள்ளிக்கிழமை அன்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து அறிவித்திருக்கும் அனைத்துக் கட்சி விவசாயிகள் போராட்டத்தினை திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென டெல்டா மாவட்டக் கழகச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.