கோட்சேவுக்கு சிலை வைத்தால் திமுக எதிர்க்கும்: அன்பழகன்
சென்னை: திருவள்ளூர் தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் மொழிப்போர் வீரவணக்கம் பொதுக் கூட்டம் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் நேற்று இரவு நடந்தது. தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: தமிழ் மொழியை பாதுகாப்பதற்காக ஹிந்தியை எதிர்த்து நடந்த மொழிப் போராட்டத்தில் தாளமுத்து, நடராஜன், சின்னசாமி உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். தமிழ் மொழியை காப்பாற்ற தங்கள் உயிரை தியாகம் செய்த அவர்களின் பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பல்வேறு சலுகைகளை செய்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டவர் உலகத்திலேயே ஜெயலலிதா ஒருவர் தான். உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் உள்ள ஜெயலலிதாவை, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? இது பற்றி எவ்வித விளக்கத்தையும் பா.ஜ.க. தலைவர்கள் கூறவில்லை.
சமஸ்கிருத மொழியை திணிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசு தீவிரமாக இருக்கிறது. தமிழ் பண்பாடு, கலாசாரத்தை மறந்து செயல்படுகிறது.
தேசப்பிதா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு சிலை வைத்தால், அதை கடுமையாக எதிர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.