தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
3 தொகுதி தேர்தல்களிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
தருமபுரி: தமிழகத்தில் நடைபெறவுள்ள 3 தொகுதி தேர்தல் முடிந்தபிறகு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயரும் என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தருமபுரி திமுக மாவட்ட செயலாளரும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி மகனின் திருமணத்தை, திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் இன்று தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதே கட்சிதான் இப்போதும் ஆட்சிக்கு வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் எந்தவிதமான செயல்பாடும் இல்லாமல் இருந்தது. 5 ஆண்டுகள் வீடியோ கான்பரன்ஸ் ஆட்சிதான் நடந்தது. அது ஆட்சியல்ல காட்சி. இப்போது அப்பல்லோ காட்சிகள் தான் நடக்கிறது. முதல்வர் பூரண குணம் அடைய வேண்டும் என்று முதன் முதலாக கருணாநிதிதான் அறிக்கை வெளியிட்டார். அதேபோன்று எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றியிருந்தபோது 40 ஆண்டுகால எனது நண்பர் நலமுடன் வரவேண்டும் என்று அறிக்கைவிட்டவர் கருணாநிதி.
தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் மொத்தமுள்ள 36 மாநிலங்களில் தமிழகத்திற்கு 18-ம் இடம் கிடைத்ததுள்ளது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு. 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது. காவிரி நதி நீர் பிரச்னையில் கர்நாடக மாநிலம், அனைத்துக் கட்சி தீர்மானம், சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம், பிரதமரை சந்தித்து மனு என்று அரசியல் கட்சிகள் பல்வேறு முயற்சிகளை செய்தன. ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சி எதுவும் செய்யவில்லை.
திமுக தலைமையில் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளின்படி, காவிரி பிரச்சனைக்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் 1.75 கோடி, திமுக பெற்ற வாக்குகள் 1.71 கோடி. இதிலிருந்தே திமுகவின் பலத்தை அனைவரும் அறிவர். அதிமுக கோமா நிலையில் உள்ளது. செயல்படாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக மாறிவிடும் என்று ஸ்டாலின் கூறினார்.