அவங்க 20 ஐ பிடிப்பதே கஷ்டமாமே.. சொல்கிறார் கனிமொழி
சென்னை: திமுக பிரசாரத்தை ஆரம்பித்த 2 வாரத்திலேயே அதிமுக 20 சீட் பிடிப்பதே கஷ்டம் என்று கருத்து கணிப்பு கூறுகிறது. தேர்தல் களத்தில் திமுக முன்னணி நோக்கி செல்கிறது. இப்போது கலைஞரும் பிரசாரத்தை துவக்கி விட்டதால் பிரசாரம் முடியும்போது நாற்பதும் நமதே என்ற நிலைமை வரும் என்று கூறியுள்ளார் கனிமொழி.
திமுக ராஜ்யசபா எம்பியான கனிமொழி சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசுகையில், திமுக ஆட்சியில் சென்னையில் சிங்கார சென்னையாக மாற்ற முயற்சி செய்தோம். ஆனால் இன்று அது குப்பை நகரமாக மாறி வருகிறது. பொதுமக்கள் பல்வேறுவித பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
தெரு ஓரங்களில் குப்பை இல்லாத இடமே கிடையாது. நமக்கு எதுக்கு வம்பு என்று சைதை துரைசாமி பேசாமல் இருக்கிறார். மா.சுப்பிரமணியம் மேயராக இருந்தபோது தினமும் வீதிவீதியாக சென்று கண்காணித்து மக்கள் மத்தியில் பெயர் எடுத்தவர். இன்று அந்த நிலை இல்லை.
திமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினோம். அதை இன்றும் மக்கள் பாராட்டுகிறார்கள். இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டி.கே.எஸ்.இளங்கோவன் நாடாளுமன்றத்தில் சிறப்பாக பேசக்கூடியவர். மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைப்பதில் மிகச்சிறந்த அரசியல்வாதி.
தலைவர் கலைஞர், அண்ணன் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கருத்துக்களை புரிந்து கொண்டு நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பதில் திறமையானவர். அதிமுக ஆட்சியை திமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு பாருங்கள். அனைத்து தரப்பு மக்களும் எந்த ஆட்சியில் பயன் அடைந்தார்கள் என்பது தெரிய வரும்.
சென்னை மாநகராட்சிக்கு 4 ஆயிரம் கோடி அம்மா வழிகாட்டுதல்படி வழங்கப்பட்டதாக கூறுகிறார்கள். அதை வைத்து குப்பையைகூட அகற்ற முடியாமல் என்ன செய்கிறார்கள்.
தேசிய அளவிலான கொள்கைகளை கொண்ட தேர்தல் அறிக்கை தயாரித்த ஜெயலலிதா, இந்தியாவுக்கே அமைதி, வளம், வளர்ச்சி அளிக்க போவதாக முழக்கமிடுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் அமைதி, வளம் வளர்ச்சி எங்கே இருக்கிறது. தினம் பேப்பர் படிப்பவர்களுக்கு இது புரியும்.
அதிமுக தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தபோது பல பத்திரிகைகள் திமுக கூட்டணி ஜெயிக்க வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாதான் ஜெயிப்பார் என்று எழுதினார்கள். ஆனால் தி.மு.க. பிரசாரத்தை ஆரம்பித்த 2 வாரத்திலேயே அ.தி.மு.க. 20 சீட் பிடிப்பதே கஷ்டம் என்று கருத்து கணிப்பு கூறுகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க. முன்னணி நோக்கி செல்கிறது. இப்போது கலைஞரும் பிரசாரத்தை துவக்கி விட்டதால் பிரசாரம் முடியும்போது நாற்பதும் நமதே என்ற நிலைமை வரும் என்றார் கனிமொழி.