எப்படி இருக்கிறார் கருணாநிதி? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
திமுக தலைவர் கருணாநிதி 7 மாதங்களுக்குப் பிறகு தொண்டர்களை சந்திக்கப் போகிறார். அவரது பேச்சை கேட்க ஆவலோடு காத்திருக்கின்றனர் தொண்டர்கள்.
சென்னை: கருணாநிதியின் 94வது பிறந்தநாள், சட்டசபை உறுப்பினராக வைரவிழா கொண்டாடும் கருணாநிதி தனது 94வது பிறந்தநாளில் தொண்டர்களை சந்திக்கப் போகிறார். கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே முதுமையினால் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. 7 மாதமாக உடல்நலக்குறைவினால் ஒய்வில் இருக்கும் கருணாநிதி, மீண்டும் தொண்டர்களை சந்திக்க வருவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதன்முறையாக 1957ஆம் ஆண்டு குளித்தலை சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் கருணாநிதி. 13 பொதுத்தேர்தலை சந்தித்த கருணாநிதி, 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை பொது தேர்தலில் திருவாரூர்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த கருணாநிதிக்கு 60வது வைரவிழா கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது.

ஜூன் 3ல் வைர விழா
அவரது பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சி மைதானத்தில் நடக்கும் வைரவிழாவில் கருணாநிதி பங்கேற்கிறார். அப்போது, அவர் தொண்டர்களை சந்திக்க உள்ளார். இந்த விழாவில் பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள்.

5 முறை முதல்வர்
5 முறை முதல்வராகவும், 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்ட சாதனைக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. கட்சி, ஆட்சியதிகாரத்தை இழந்தபோதும், இவர் போட்டியிட்ட தொகுதிகளில் இவரே வெற்றி வாகை சூடியுள்ளார்.

முதல்வராக சாதனை
சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தது, மே தினத்துக்கு அரசு விடுமுறை, நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்தது, பெண்களுக்கு சொத்துரிமை, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து என கருணாநிதியின் சாதனைகள் ஏராளம். இந்தியாவின் பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமரையும் தேர்வு செய்ததில் கருணாநிதி முக்கியப் பங்காற்றியுள்ளார்.

அரசியல் தலைவர்
தி.மு.க வை புறக்கணித்திருந்தாலும் கருணாநிதியை என்றும் புறக்கணித்ததில்லை. தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் மற்றும் நன்றாக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு என்று கூறி வருகின்றனர் திமுகவினர். முதுமையினால் ஏற்பட்ட உடல்நிலையின் காரணமாக அவர் ஓய்வில் இருந்தாலும், அவரது எண்ணங்கள் எப்போதும் தமிழக மக்களைப் பற்றியே சுற்றி சுழன்று கொண்டிருக்கும்.

ஓய்வறியாத சூரியன்
சினிமாவில் கதை திரைக்கதை வசனம் எழுதிய கருணாநிதி, தனது படைப்புகளை டிவி சீரியலாகவும் மாற்றினார். ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி தொடருக்கு கருணாநிதி கதை, வசனம் எழுதினார். தனது பேனாவிற்கு ஓய்வு கொடுக்காமல் எழுதிக்கொண்டிருந்த கருணாநிதி இன்றைக்கு ஓய்வில் இருக்கிறார். அவர் கடைசியாக பங்கேற்றது ராமனுஜர் டிவி சீரியலில் நடித்த கலைஞர்களுக்கு பரிசு கொடுக்கும் போதுதான் என்கின்றனர்.

ஒவ்வாமை நோய்
ஒவ்வாயை நோயினால் ஓய்வெடுத்த அவர், டிசம்பர் மாதம் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக அரசியலில் ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் ஓய்வு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வீடு திரும்பிய அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

தவிர்க்க முடியாத தலைவர்
உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோர்வடையவில்லை. முதுமை தொட்டாலும் மூளை தளரவில்லை. தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்! என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். தமிழ்நாட்டு அரசியலில் கருணாநிதி தவிர்க்க முடியாத அரசியல் தலைவர். திமுக தலைவரைப் போல தமிழக அரசியலில் விமர்சிக்கப்பட்டவர் வேறெவரும் இல்லையென்பது உண்மைதான்.

எதிர்பார்ப்புடன் காத்திருப்பு
ஜூனில் 94வது வயதை தொடவிருக்கும் கருணாநிதியின் மீது பலரும் பல விமர்சனங்களை முன் வைத்தாலும் முதுபெரும் தலைவராக, திராவிட இயக்கத்தை தமிழகத்தில் வேரூன்றச் செய்தவராக, மிகச்சிறந்த எழுத்தாளராக, பேச்சாளராக போற்றப்படுகிறார். திருமண விழா, அரசியல் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் கருணாநிதி, கடந்த 7 மாத காலமாக அவரது எழுத்தை பார்க்காத ஊடகங்களும், அவரது குரலை கேட்காத தொண்டர்களும் ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications