பொங்கலோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்தும் சேர்த்து சொன்ன ஸ்டாலின்!
சென்னை: தை முதல் நாளை முன்னிட்டு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது பண்பாட்டு விழாவை மீட்டெடுத்த தலைவர்களை நன்றியோடு நெஞ்சில் நிறுத்துவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் நன்னாளே தமிழர் திருநாள். அந்த தை 1ஆம் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டாகும்.

இனித்திடும் இந்த இனிய விழாவைத் தமிழ் மக்கள் மகிழ்ச்சி மிக்கதாக மட்டுமல்ல, நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள். தங்கள் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் கால்நடைகளுக்கு நன்றிப் படையிலிடுகிறார்கள். வயல்வெளியை செழிக்க வைக்கும் கதிரொளியை வணங்குகிறார்கள். உலகத்தின் அச்சாணியாக விளங்கும் உழவர் பெருமக்களை நெஞ்சில் நினைத்து வாழ்த்துகிறார்கள்.
பல்வேறு வடிவங்களில் பொங்கல் விழா
தமிழ் மக்கள் தங்களின் சாதி-மத வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடும் பொங்கல் விழா, உழவர்களின் திருநாள் மட்டுமல்ல, உலகோர் அனைவரும் கொண்டாட வேண்டிய உழைப்பின் பெருவிழா. உழவையும் அதிலிருந்து கிளைத்து வளர்ந்து நிற்கும் உயர் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய விழா என்பதால் தான் சிற்றூர் முதல் மாநகரம் வரை மூன்று நாட்கள்-நான்கு நாட்கள் என பண்பாட்டு அடையாளங்கள் நிறைந்த பல்வேறு வடிவங்களில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வறட்சியின் கோரப்பிடியில் தமிழகம்
தமிழகம் இன்று வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வு நலிந்துள்ளது. தமிழர்களின் மரபார்ந்த வீர விளையாட்டான ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அரசாங்கத்துடன் சட்டவழியிலான மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலிலும், நமது போராட்டங்களுக்கான ஊக்கம் பெற பொங்கல் விழா கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன.
பண்பாட்டுப் படையெடுப்புகள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழினத்தின் மீது பண்பாட்டுப் படையெடுப்புகள் நடத்தப்பட்டே வருகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கெதிரானப் போராட்டங்களும் வீறுகொண்டு நடைபெற்றிருக்கின்றன. இத்தகையப் போராட்டங்களில் வேறெவரும் பெற முடியாத வெற்றியைப் பெற்று, சமுதாய மாற்றத்தை இந்தத் தமிழ் மண்ணில் நிலைநாட்டிய பெருமைக்குரியது திராவிட இயக்கமும் அதன் அரசியல் அமைப்பான திராவிட முன்னேற்றக் கழகமும்.
தலைவர்களையும் நன்றியுடன் நெஞ்சில் நிறுத்துவோம்
நம் மீது திணிக்கப்பட்ட பண்டிகைகளுக்குப் பதிலாக, நம்முடைய மண்ணின் அடையாளமான பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக மாற்றியது திராவிட இயக்கம். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பாவேந்தரும் இன்னும் பல தமிழறிஞர்களும் பெருந்தலைவர்களும் பொங்கல் நன்னாளைத் தமிழர் திருநாளாக முன்னெடுக்கும் முயற்சியில் அயராது உழைத்து பெரு வெற்றி பெற்றனர். இயற்கைக்கும் உழவருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் இந்நாளில், நமது பண்பாட்டு விழாவை மீட்டெடுத்த இந்தத் தலைவர்களையும் நன்றியுடன் நெஞ்சில் நிறுத்துவோம்.
கருணாநிதிக்கு புகழாரம்
இந்தத் தலைவர்களின் வரிசையில், அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் ஆரியப் படையெடுப்பினைத் தனது கூரிய மதிநுட்பத்தால் வென்று காட்டிய ஒப்பிலாத் தலைவரும் ஓய்வறியா மாமனிதருமான நம் தலைவர் கலைஞரின் பணிகள் மகத்தானவை. தன் மூத்த பிள்ளையாகக் கருதும் முரசொலியின் பொங்கல் மலரைத் தமிழர்களின் கொண்டாட்டத்திற்கானப் பூங்கொத்தாகவும் போராட்டத்திற்கான ஆயுதமாகவும் தந்தவர் நம் தலைவர் கலைஞர். தமிழர் திருநாளுக்கான வாழ்த்து மடல்களை தன் எண்ணங்களின் எழுத்தோவியத்துடன் வண்ண வண்ண வடிவங்களில் அளித்தவர்.
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, வரலாற்றுப் பார்வையுடன் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை நடைமுறையாக்கி மாநிலமெங்கும் ஒளிபூக்கும் விளக்குகளுடன் கொண்டாடச் செய்தவர். தமிழ் மறையாம் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவர் பிறந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு மறைமலையடிகள், திரு.வி.க உள்ளிட்ட தமிழறிஞர்கள் வகுத்துத் தந்த காலக்கணக்கின்படி, திருவள்ளுவராண்டுக் கணக்கை தமிழக அரசு கடைப்பிடிக்கும்படி செய்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.
தமிழ் ஆண்டு, மாதம், நாளை குறிப்பிடுவோம்
தலைவர் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கையும், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதையும் கழகத்தினர் அனைவரும் மறவாமல் கடைப்பிடித்து, தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம். இனி கழகத்தின் சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும், கழகத்தினரின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களுக்கும் அச்சிடப்படும் அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், பதாகைகள் உள்ளிட்ட அனைத்திலும் வழக்கமான ஆங்கிலத் தேதியுடன் திருவள்ளுவர் ஆண்டு-தமிழ் மாதம்-நாள் ஆகியவற்றையும் தவறாமல் குறிப்பிடுவோம். அனைத்துத் தமிழர்களும் இதனைக் கடைப்பிடிக்கும்படி செய்வோம். அதில் தலைவர் கலைஞரின் ஒளிவீசும் புன்னகையைக் காண்போம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் நலத்திற்கும் அயராது பாடுபட பொங்கல் திருநாள் நம் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் வழங்கட்டும். தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல்-புத்தாண்டு வாழ்த்துகள் என ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications