'அம்மா'வுக்காக அதிமுகவினர் பரிகாரம்: கறி விலை குறைந்த மாதிரி தெரியலையேப்பா!
சென்னை: அதிமுகவினர் வரும் 17ம் தேதி வரை அசைவம் சாப்பிடாமல் பரிகாரம் செய்தால் ஜெயலலிதாவுக்கு நல்லது என்று ஜோதிடர் கூறியுள்ள நிலையில் இறைச்சி விலை குறைந்தது போலத் தெரியவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான ஜெயலலிதா கடந்த 27ம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் அதிமுகவினர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்துவதை விட வரும் 17ம் தேதி வரை சுத்தபத்தமாக அசைவம் சாப்பிடாமல் பல்வேறு பரிகாரங்கள் செய்வது தான் அவருக்கு நல்லது என்று பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் குரு கோவிலில் பூஜைகள் செய்வதும் நல்ல பலன் அளிக்கும் என்று கூறியிருந்தார்.
ஜோதிடர் அறிவுரைப்படி அதிமுகவினர் இந்நேரம் அசைவம் சாப்பபிடுவதை நிறுத்தி இருந்தால் அவற்றின் விற்பனை பெருமளவில் சரிந்திருக்கும். டிமாண்ட் குறைந்திருந்தால் விலையும் குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறு இறைச்சி உள்ளி்டவற்றின் விலை குறைந்தது போலத் தெரியவில்லை.
தமிழகத்தில் அதிமுக உறுப்பினர்கள் 1 கோடி பேர் உள்ளனர் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில் 1 கோடி பேர் அசைவம் சாப்பிடாவிட்டால் அவற்றின் விலை நிச்சயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.