ஒரு பக்கம் தாய்! மறுபக்கம் தாரம்! மத்தளமான கணவன்மார்கள்! பூட்டு முனியப்பன் இருக்காரு! டோன்ட் வொர்ரி
மாமியார் மருமகள் சண்டை தீர சேலம் பூட்டு மாரியம்மன் கோயிலில் வேண்டுகொள்ளுங்கள்.
சேலம்: மாமியார் மருமகள் சண்டை ஓய சேலம் பூட்டு முனியப்பன் கோயிலில் வந்து சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.
பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள், மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி. அது போல் தாய், தாரம் இடையே மாட்டிக் கொண்டு இரு பக்கமும் இடி வாங்கும் கணவன்மார்கள் இதற்கு விடிவுகாலம் பிறக்காத என ஏங்குகிறார்கள்.
மாமியார் மருமகள், இரண்டு பொண்டாட்டி சண்டை இவையெல்லாம் காலம் காலமாக இருந்து வருகிறது. இவை ஓயவே ஓயாத அளவுக்கு ஒருவர் ஆப் ஆனால் மற்றொருவர் ஆன் ஆவர். இந்த சண்டை குறித்து காமெடியாக எத்தனையோ பட்டிமன்றங்களையும் நடத்திவிட்டனர்.

பட்டிமன்றம்
கடைசியில் பட்டிமன்றத்திற்கு தீர்ப்பு சொல்ல வந்த நடுவர் வீட்டிலும் இதே பிரச்சினைதான். இந்தியா- பாகிஸ்தான் சண்டை கூட ஓய்ந்தாலும் ஓயும், மாமியார் மருமகள் சண்டை மட்டும் காலாகாலத்திற்கு தொடர்ந்து வருகிறது. சரி தனிக்குடித்தனம் வைத்துவிடலாம் என்றால் வீடியோ கால் போட்டு சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

தாயா தாரமா
தாயா, தாரமா என குழப்பமான கேள்விக்கு ஒரு ஆணால் எப்படி பதில் சொல்ல முடியும்? இந்த தொல்லைக்காகவே சிலர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு இவர்களது சண்டை தொடர்கிறது. பண்டிகை நாட்களில் துணி வாங்க செல்லும் போது தாய், தாரம் இருவருக்கும் ஒரே விலையில் ஒன்னு போல சேலை வாங்கி கொண்டு வந்து கொடுத்தால் அதிலும் சண்டைதான்.

கலருக்கு சண்டை
எனக்கு ஏன் இந்த கலர், அவங்களுக்கு மட்டும் அந்த கலர் என சின்ன விஷயத்திற்காக கூட சண்டையிடுகிறார்கள். இது போல் வீட்டுக்கு வீடு வாசற்படிதாங்க. ஆனால் இந்த சண்டையை எதிர்கொள்ள தெரிந்துவிட்டால் எதிரி நாட்டின் அணுகுண்டை கூட கேட்ச் பிடித்து திருப்பி தாக்கும் அளவுக்கு வல்லமையை கணவர்கள் பெற்றுவிடுவார்கள்.

சண்டை ஓய
இப்படி குடும்பத்தில் சண்டை ஓய, சேலத்தில் பூட்டு முனியப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்டால் போதுமாம். சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் ஏற்காடு அடிவாரம் செல்லும் சாலையில் அய்யந்திருமாளிகை பகுதியில் அமைந்துள்ளது ஆலங்குட்டை பூட்டு முனியப்பன் கோயில். சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.

பூட்டுகள்
இந்தக் கோயிலை சுற்றி ஏராளமான பூட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கோயில் 150 ஆண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த கோயில் ஆலங்குட்டை முனியப்பன் கோயில் என்றே இது அழைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில் பூசாரி, முனியப்பன் சன்னதியில் ஒரு பூட்டை பூட்டி வைத்து தனது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளார். அந்த பிரச்சினை தீர்ந்துவிட்டது. இதனால் பக்தர்களும் பூட்டை பூட்டி வைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.

வாய்க்கு பூட்டு
மாமியார்- மருமகள் சண்டைக்கு ஒருவரின் வாய்க்கு பூட்டு போட இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். முனியப்பனிடம் மாமியார் வேண்டினால், மருமகள் சைலண்ட் மோடு, மருமகள் வேண்டினால் மாமியார் தினந்தோறும் மவுன விரதம்தான். இதனால் குடும்பத்தில் 90 சதவீத பிரச்சினைகள் ஓய்ந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற பூட்டு பூட்டி வேண்டிக் கொள்கிறார்கள்.

மகிழ்ச்சி
வேண்டிக் கொண்டு பூட்டி சாவியை கொண்டு சென்றுவிட வேண்டும். அடையாளத்திற்கு அந்த பூட்டில் பெயர் எழுதலாம். வேண்டுதல் நிறைவேறியதும் சாவி கொண்டு வந்து பூட்டை திறந்து ஒரு தொட்டியில் பூட்டையும் சாவியையும் போட்டுவிட வேண்டும். இந்த வினோத வேண்டுதலை வேண்டிக் கொண்டால் நிறைவேறுவதாக மக்கள் மகிழ்ச்சியாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications