தவறான சிகிச்சையால் ஜெயலலிதா மரணம்.. ஆஸ்தான டாக்டர் பகீர் குற்றச்சாட்டு
எனது சிகிச்சை தொடர்ந்திருந்தால், இப்போது ஜெயலலிதா 100 சதவீதம் நலமோடு இருந்திருப்பார் என்று டாக்டர், ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தவறான சிகிச்சையால் ஜெயலலிதாவுக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவருக்கு முன்பு சிகிச்சையளித்து வந்த டாக்டர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஆளுநராக இருந்த ரோசய்யா உள்ளிட்ட பல விஐபிகளுக்கு சிகிச்சை அளித்தவர் டாக்டர் எம்.என்.ஷங்கர். இவர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் கூட 7 வருடங்களுக்கு முன்பு சிகிச்சையளித்த அனுபவம் உள்ளவர். அக்குபங்சர் துறையில் பிரபலமானவர். ஜெயலலிதாவுக்கும் கடந்த வருடம் இவர் சிகிச்சையளித்திருந்தாராம்.
இந்நிலையில் 'பர்ஸ்ட்போஸ்ட்' என்ற ஆங்கில இணையதளத்திற்கு டாக்டர் ஷங்கர் அளித்துள்ள பேட்டி: கடந்த வருடம் ஜூன் மாதவாக்கில், ஜெயலலிதாவால் சிறிதும் நடமாட முடியாத சூழல் உருவானது. அப்போது என்னை சிகிச்சையளிக்க அழைத்தனர். நான் சிகிச்சையளித்த பிறகு ஆகஸ்ட் மாத வாக்கில், ஜெயலலிதாவால் வலியின்றி எளிதாக நடக்க முடிந்தது.
ஆனால், இதன்பிறகு என்னை சிகிச்சையளிக்க அழைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்து வந்த சசிகலாவின் சொந்தக்காரரான (இளவரசியின் மருமகன்) டாக்டர்.சிவகுமாரோ, ஜெயலலிதா இப்போது நலமாக இருப்பதாக என்னிடம் தெரிவித்து விட்டார்.
சிறப்பாக உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வந்த ஜெயலலிதா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். எனது சிகிச்சை தொடர்ந்திருந்தால், இப்போது ஜெயலலிதா 100 சதவீதம் நலமோடு இருந்திருப்பார் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு என கூறி ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது குறிப்பிடத்தக்கது.