கருத்தடை மாத்திரையால் பெண்களின் கண் பார்வை பறிபோகும் அபாயம்...!

கருத்தடை மாத்திரையைச் சாப்பிடுவதால் இந்தப் பிரச்சினை உருவாகியிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஆய்வுக் குழு ஒன்று, இதுதொடர்பான ஆய்வில் இறங்கி அதுகுறித்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கண்ணியல் அகாடமி வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், பெண்கள் சாப்பிடும் குறிப்பிட்ட கருத்தடை மாத்திரையில் உள்ள உள்ள ஈஸ்ட்ரோஜன் காரணமாகவே இந்தப் பிரச்சினை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 20 முதல் 45 வயது வரையிலான பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் எவ்வளவு காலமாக கருத்தடை மாத்திரையைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலோ இதுபோன்ற பிரச்சினை இருப்பதாக இதுவரை தெரியவில்லை என்று சென்னையைச் சேர்ந்த பிரபலமான வாசன் ஐ கேர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் நிர்ஹா ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் அமெரிக்காவில் இந்தப் பிரச்சினை உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் இப்படி ஒரு பிரச்சினை இதுவரை வந்ததாக தெரியவில்லை. அமெரிக்க கண்ணியல் கழகம் நடத்திய ஆய்வில் கருத்தடை மாத்திரயால் பெண்களுக்கு கண் அழுத்தம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குளுகோமா எனப்படும். உரிய சிகிச்சை எடுக்காவிட்டால், இது பார்வை பறிபோவதில் கொண்டு போய் விடும்.
கண்ணில் அதிக அளவில் அழுத்தம் ஏற்பட்டு அதிக அளவில் நீர் தேங்கி விடும். இதனால் கண்ணில் நீர் ஒழுக ஆரம்பிக்கும். இந்த அழுத்தம், கண்ணின் விழிவெண் படலத்தைப் பாதிக்கும்.
இப்போது எங்களிடையே கண் அழுத்தம் தொடர்பாக வரும் பெண்களிடம் அவர்களின் பிறப்புக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்தும் கேட்டறிகிறோம். இது அவர்களது பிரச்சினையை எளிதாக சரி செய்ய உதவும் என்றார்.
போர்ட்டிஸ் மலர் மருத்துவவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் வேலாயுதம் கூறுகையில், தற்போது 35 முதல் 40 வயது வரையிலான பெண்கள் பலர் கண் அழுத்தப் பிரச்சினையால் வருகின்றனர் என்றார்.
அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் அமர் அகர்வால் கூறுகையில், இதை செகண்டரி குளுகோமா என்பார்கள். தேவையில்லாமல் டாக்டர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் நாமே மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது, கருத்தடை மாத்திரைகளை அதிக அளவில் பயன்படுத்துவது ஆகியவைதான் இதற்கு முக்கியக் காரணம்.
பெண்கள் அதிக அளவில் கருத்தடை மாத்திரைகளை, நீண்ட காலம் பயன்படுத்தினால் நிச்சயம் கண்ணில் பாதிப்பு வரும். இருப்பினும் குளுகோமாவுக்கு இதுதான் காரணம் என்று கூற மாட்டேன். இதுவும் ஒரு காரணம். நீண்ட காலமாக கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும் பெண்கள் அடிக்கடி தங்களது கண்களைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது என்றார்.












Click it and Unblock the Notifications