பிரசவ ஆபரேஷனில் வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவர்கள்- குமுறும் திருச்சி தம்பதி!
திருச்சி: திருச்சியில் பிரசவ அறுவை சிகிச்சை செய்தபோது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பெண்ணின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி குண்டூர் அய்யனார்கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் இந்திய ராணுவத்தில் அசாமில் உள்ள பட்டாலியனில் பீரங்கி படையில் பணியாற்றுகிறார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் திருச்சி கலெக்டர் பழனிச்சாமியை சந்தித்து புகார் அளித்தார்.

இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், ''எங்களுக்கு ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில், எனது மனைவி ராஜலட்சுமி இரண்டாவது முறை கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி திருச்சி குழந்தை யேசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜலெட்சுமி, சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பிறகு கடுமையான வயிற்று வலியால் துடித்தாள். அடுத்து அவளுக்கு வாந்தி, வயிற்று போக்கு என அடுத்தடுத்து தொந்தரவுகள் ஏற்பட்டது. இதனால் மீண்டும் குழந்தை பிறந்த குழந்தை யேசு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினேன். அவளை பரிசோதித்த டாக்டர்கள், இது சாதாரண வயிற்று வலி என்றார்கள்.
ராஜலட்சுமியை பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போய் ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான். அவள் வயிற்றில் துணி இருப்பதும், பிரசவ ஆபரேஷனின்போது டாக்டர்கள், பேண்ட் எய்டு துணியை உள்ளே வைத்து தைத்து விட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அதை மீண்டும் ஆபரேஷன் செய்து, அந்த துணியை எடுத்தார்கள்'' என்றார்.
அப்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 129 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலத்தில் இருந்த துணியை எடுத்துள்ளார்கள். இதை ஆபரேஷன் செய்து எடுக்காமல் இருந்திருந்தால் அவர் இறந்து போயிருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்த புகாரின் பேரில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர் தம்பதியினர்.












Click it and Unblock the Notifications