ஐஐடி விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது: தமிழிசை வேண்டுகோள்
சென்னை: சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ஐஐடியில் அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டம் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐஐடி விவகாரத்தை சில கட்சிகள் அரசியலாக்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐ.ஐ.டி. பெயரைப் பயன்படுத்தி தங்கள் சொந்த கருத்துகளை வெளியிட்டதால்தான் ஒரு குறிப்பிட்ட மாணவ அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூண்டி அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். மாணவர் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையின் உண்மையின் நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையை வைத்து, டெல்லியில் ராகுல்காந்தியோ, தமிழகத்தில் இளங்கோவனோ அரசியலாக்கி அதில் குளிர்காய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இங்கேயுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும், இதை வேண்டுமென்றே அரசியலாக்கி, கல்விப் பாதையில் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அரசியல் தூண்டுதல்கள் நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதையும் மாணவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications