அடுத்தடுத்து 2 பெண்களை சரமாரியாக வெட்டிக் கொன்ற 'புலிக்குட்டி'க்கு போலீஸ் வலை வீச்சு
திருநெல்வேலி: தவறான நடத்தை காரணமாக மனைவி மற்றும் பக்கத்துவீட்டு பெண் ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொன்ற புலிக்குட்டி என்ற கூலித் தொழிலாளியை நெல்லை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வீரநல்லூர் ராஜிவ் காலனியை சேர்ந்தவர் புலிக்குட்டி. கூலித் தொழிலாளியான இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உளளனர். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த குமார், நாகர்கோவிலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இதனால் வாரம் ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார். இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் குமாரின் மனைவி பரமேஸ்வரியின் அக்கா மகன் வேல்முருகனுக்கும், புலிக்குட்டியின் மனைவி அருணாவுக்கும் இடையே கள்ள காதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் வேல்முருகனும், அருணாவும் கோவைக்கு எஸ்கேப் ஆகிவிட்டனர்.
இதனிடையே பரமேஸ்வரி கோவைக்கு சென்று அவர்கள் இருவரையும் வீரவநல்லூருக்கு காரில் அழைத்து வந்தார். இதில் கடுமையான ஆத்திரத்தில் இருந்து வந்தார் புலிக்குட்டி.
இது குறித்து மனைவி அருணாவுடன் புலிக்குட்டி நேற்று சண்டை போட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த புலிக்குட்டி, அருணாவை சரமாரியாக அரிவாளால் வெட்டித் தள்ளியுள்ளார். அதே அரிவாளுடன் அருணாவின் கள்ளக் காதலுக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரியை தேடிப் போய் வெட்டியிருக்கிறார் புலிக் குட்டி.
இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர். இருவரையும் வெட்டிய கையோடு புலிக் குட்டி தலைமறைவாகிவிட போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.