செல்போனில் சக ஊழியரின் போட்டோ.. காதலி மீது சந்தேகம்... தற்கொலைக்கு முயன்ற காதலன்!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலி மீது சந்தேகப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பட்டாபிராமில் காதலியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பட்டாபிராம் டிபன்ஸ் காலனியை சேர்ந்த கிரண் பாலாஜி என்பவரும் திருவள்ளூர் மாவட்ட வேப்பம்பட்டை சேர்ந்த சாந்தி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சாந்தி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களின் காதல் இருவீட்டாருக்கும் தெரிந்ததையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரண் பாலாஜி, சாந்தியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சாந்தியின் கைப்பேசியில் அவருடன் பணிபுரியும் சக ஊழியரின் புகைப்படம் இருந்துள்ளது.
இதனைக் கண்டு சந்தேகமடைந்த பாலாஜி, இதுகுறித்து சாந்தியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் பாலாஜி, சாந்தியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் நட்பு ரீதியில் பழக்கம் இருக்கும் அதனை பெரிது படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சமாதானம் அடையாத கிரண் பாலாஜி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.