ஜெ. கைரேகையை பெற்றதாக அறிவித்தவர்.. சர்ச்சை டாக்டர் பாலாஜிக்கு விருது வழங்கி கவுரவித்த தமிழக அரசு
சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு விருது வழங்கும் விழாவில் மறைந்த ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த சர்ச்சை டாக்டர். பாலாஜிக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : பணம் வாங்கிக் கொண்டு ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்து கொடுத்தார் என்ற சர்ச்சையில் சிக்கிய டாக்டர். பாலாஜிக்கும் தமிழக அரசு சிறந்த மருத்துவர் பட்டமளித்து சிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் ஜூன் 28ம் தேதி நடந்தது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விழாவில் கலந்துகொண்டு, தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் 12 மருத்துவர்களுக்கு விருதுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார். இது நல்ல விஷயம் தானே என நீங்கள் சொல்வது புரிகிறது. இதில் விஷயம் என்னவென்றால் விருது வாங்கிய 12 பேரில் சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சர்ச்சை டாக்டர். பாலாஜியும் ஒருவர் என்பது தான்.

கைரேகைப் பதிவு
கடந்த அக்டோபர் 29ம் தேதி திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களை முன்மொழியும் பத்திரிக்கைகளில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பெரும் சர்ச்சை வெடித்த போது ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். கையில் மருந்துகள் செலுத்தப்படுவதால், கையெழுத்து போட முடியாமல் என்னுடைய முன்னிலையில் கைரேகை பதிவு செய்தார் என்றும் டாக்டர். பாலாஜி கூறியிருந்தார்.

பணம் பெற்றதாக சர்ச்சை
அப்போதைக்கு அந்த சர்ச்சை அடங்கினாலும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களில் நவம்பர் மாதம் டாக்டர். பாலாஜிக்கு ரூ. 5 லட்சம் பணம் தரப்பட்டதாக வரவு வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைரேகை பதிவு செய்வதற்காகத் தான் பணம் பெற்றார் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவின.

மறுப்பு
இதையும் மறுத்த டாக்டர். பாலாஜி நான் அமைச்சரிடம் எந்தப் பணமும் வாங்கவில்லை என்று விளக்க அறிக்கை வெளியிட்டார். இப்படி ஜெயலலிதா மரண மர்மத்தில் முக்கிய பங்காற்றிய டாக்டர். பாலாஜியைத் தான் தமிழக அரசு சிறப்பித்துள்ளது.

கவுரவம்
சர்ச்சை டாக்டரோடு சிறந்த டாக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகமத் ரேலா, இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், காது, மூக்கு, தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரன், உள்பட 12 பேருக்கு விருது, பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

சிறப்பிப்பு
இதேபோன்று சிறப்பாக பணியாற்றிய சென்னை அரும்பாக்கம் அரசு சித்தா மருத்துவமனை டாக்டர் பாலமுருகன் உள்பட 165 பேருக்கு பொன்னாடை அணிவித்து விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications