வைகோ, கிருஷ்ணசாமி சந்திப்பு... மக்கள் நலனுக்காக என கிருஷ்ணசாமி விளக்கம்
சென்னை: தமிழக மக்கள் நலனைக் காக்க எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வைகோவை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அரசியல் குறித்தும், இடைத்தேர்தல் பற்றியும் எதுவும் பேசவில்லை என்றும் கிருஷ்ணசாமி உடனான சந்திப்பு பற்றி வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. மேகதாது உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்களின் நலனுக்காக எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி இது என்றார். நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்தோ, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்தோ, கூட்டணி பற்றியோ எதுவும் விவாதிக்கவில்லை என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்தார். ஸ்டாலின் உடனான சந்திப்பு பற்றி எழுந்த கேள்விக்கு விளக்கம் அவர், அது நட்பு ரீதியான சந்திப்பு என்றார். அரசியல் பற்றி நேற்றைய தினம் எதுவும் பேசவில்லை என்று கூறினார்.
டாக்டர் கிருஷ்ணசாமி உடனான சந்திப்பும் அவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது. தேர்தலை குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி பற்றி திருமாளவன் கூறிவருவது அவரது கருத்து என்றும், இதில் தான் கருத்து கூற எதுவும் இல்லை என்றும் வைகோ தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் வைகோ கூறினார். அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அனைத்து முகாந்திரமும் இருப்பதாக கூறியுள்ளார். எனவே கர்நாடகாவின் நடவடிக்கைளை கவனித்துக்கொண்டிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.