விதி மீறல்களை ஊக்குவி்ப்பதால்தான் கட்டட விபத்துகள் நடக்கின்றன.. டாக்டர் ராமதாஸ்
சென்னை: அடுத்தடுத்து கட்டட விபத்துகள் நடக்க விதி மீறல்களைத் தடுக்காமல் ஊக்குவிப்பதே காரணம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

'சென்னையை அடுத்த பொன்னேரி அருகில் உள்ள உப்பரபாளையம் கிராமத்தில் தனியார் கிடங்கு ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நாகராஜ் விரைந்து நலம்பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொன்னேரி பகுதியில் நேற்றிரவு மழை பெய்ததால் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சாதாரண மழைக்கே தாக்குபிடிக்க முடியாத அளவுக்கு சுற்றுச்சுவர் கட்டியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். 250 மீட்டர் நீளத்திற்கும், 16 அடி உயரத்திற்கும் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரில் ஒரு இடத்தில் கூட தூண்கள் எழுப்பப்படவில்லை என கூறப்படுகிறது. இது கடுமையான விதி மீறலாகும். இதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் 61 தொழிலாளர்கள் உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், சோகமும் விலகுவதற்கு முன்பாகவே இப்படி ஒரு விபத்து நடந்து 11 பேர் உயிரிழந்திருப்பது சொல்ல முடியாத அளவுக்கு வேதனையையும், இத்தகைய விபத்துக்கு காரணமானவர்கள் மீது அறச் சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது. விதி மீறல்கள் தடுக்கப்படுவதற்கு பதிலாக, ஊக்குவிக்கப்படுவது தான் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.
யாரோ செய்யும் தவறுக்கு, ஒரு பாவமும் செய்யாத அப்பாவிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவது தடுக்கப்பட வேண்டும். இனி புதிய கட்டடங்கள் கட்டப்படும்போது ஒவ்வொரு நிலையிலும், அதன் வலிமை குறித்து பொறுப்பான, திறமையான அதிகாரிகள் குழுவைக் கொண்டு சோதனை நடத்தப்படுவதையும், கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின், சம்பந்தப்பட்ட கட்டடம் வலிமையாகவும் விதிகளுக்குட்பட்டும் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என அங்கீகரிக்கப்பட்ட வல்லுனர் குழுவிடமிருந்து சான்று பெறுவதையும் கட்டாயமாக்க வேண்டும். அத்தகைய சான்றிதழ் பெறப்பட்ட பிறகே சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் குடியேற முடியும் என்ற அளவுக்கு விதிமுறைகளை அரசு கடுமையாக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, விபத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை கருணை அடிப்படையில் ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications