அப்போது எங்கே போனார்கள் முற்போக்குவாதிகள்.. மாதொருபாகன் சர்ச்சை குறித்து ராமதாஸ் கேள்வி
கரூர்: எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூல் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து இப்போது கூச்சலிடும் முற்போக்கு சக்திகள், அன்று புதுமைப்பித்தன், வண்ண நிலவன், செந்தில் நாதன் போன்ற நாவல் ஆசிரியர்கள் எழுதிய சர்ச்சைக்குறிய நாவல்கள் குறித்து எங்கே போனார்கள் என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
கரூர் அருகே தாந்தோன்றிமலையில் உள்ள ஆரிய வைசியர் திருமண மணடபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த பா.ம.க நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு சிலை வைக்க வேண்டும். இந்த சிலை வைப்பதினால் தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் மொழிக்கு உயிர்நீத்தவர்களின் பெருமையையும் இன்றைய இளைஞர்கள் அறிய முடியும்.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. தமிழை காப்பதாக கூறி மக்களை தூண்டி விட்டு ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் இந்தியை எதிர்த்து தமிழை ஆங்கிலத்திடம் அடகு வைத்தனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழை படிக்காமல் பட்டம் வாங்க முடியும் இந்தியாவில் வேறு எங்கும் இந்த நிலை இல்லை.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொன்னவர்கள் ஆட்சியில் தற்போது எல்லா அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ் வாழ்க என்ற பலகையில் மட்டுமே தமிழ் வாழ்கிறது. தமிழ்நாட்டில் 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்றும் தமிழ் மொழியை ஆட்சி மொழி என வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறேன்.. தற்போதும் வலியுறுத்துகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், திருச்செங்கோடு பகுதியில் வாழும் ஒரு சமுதாய பெண்களை இழிவு படுத்தும் வகையில் எழுதப்பட்ட பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு கூச்சலிடும் முற்போக்கு சக்திகள் கடந்த 1935 ல் புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதையான துன்பக்கேணியையும், 1977 ல் வண்ணநிலவன் எழுதிய கடல் புரத்தில் என்ற நெடுங்கதையையும், பதிப்பாளர் சிவ செந்தில் நாதன் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பருக்கை என்ற நாவலையும் மேற்கோள் காட்டி, அப்போது முற்போக்கு சக்திகள் எங்கே போனது என்று கேட்டார்.