For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கழக மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்!

By Mathi
Google Oneindia Tamil News

டாக்டர் ந. ராமசுப்ரமணியன், அரசியல் விமர்சகர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சமீபத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாயிலுக்குச் சென்று, அங்கு அவர் கோயில் பட்டர்கள் அளித்த மரியாதை, பூர்ண கும்பம், வேத கோஷத்துடன் வழங்கிய ஆசிகள், தாயார் சன்னிதியிலிருந்து எடுத்து வந்த மஞ்சளை அவர் நெற்றியில் இட்டது ஆகியவை பெரிய விவாதப் பொருளாக மாறிவிட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம் தனது தாய்க் கழகமான திராவிடக் கழகத்தையும், பெரியார் ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் கொள்கைகளையும் ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

பெரியாரின் மிக முக்கியமான பரப்புரையான "கடவுள் இல்லை'' என்பதை ஒதுக்கிவிட்டு, அறிஞர் அண்ணாதுரை திருமூலரின் திருமந்திரத்தில் வரும் ""ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' பாடல் வரியை ஏற்று, கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து மாறுபட்டார். அதன்பால் பெரியாரின் ""பிராம்மணர் எதிர்ப்பு'' என்பதையும் ஒதுக்கி ""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' எனும் வள்ளுவப் பெருந்தகையின் வழியை தமது வழி என்றும் தெளிவுபடுத்தினர்.

Dr Ramasubramanian urges DMK to drop Dravidian Ideology

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களான அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி மு.க. ஸ்டாலின் மற்றும் அவர்கள் வழித் தோன்றல்கள், தொண்டர்கள் சிலர், இந்துக் கோயில்களுக்கு வெளிப்படையாகச் சென்று வழிபடுவதில்லை. அதாவது ""ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்று கூறினாலும் இந்து மத விழாக்களுக்கு வாழ்த்துச் சொல்வதில்லை. மாறாக, இந்துக் கடவுள்களை இழித்தும் பழித்தும் பேசுவதை ரசிப்பதும், மறைமுகமாக இந்து மதத்தையும், இந்துமத பழக்க வழக்கங்களைக் கேலி செய்வதும் இவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ராமேஸ்வர ராமசேது பாலம் ராமாயண காலத்தில் கட்டப்பட்டது என்று கூறினால் ""ராமர் எந்தக் கல்லூரியில் எஞ்சினீரிங் படிப்பைப் படித்தார்'' என்றும் திமுக சட்டசபை உறுப்பினர் நெற்றியில் உள்ள குங்குமத்தை பார்த்து, ""என்ன ரத்தம் வழிகிறது?'' என்பதும், ""இந்து என்றால் திருடன் என்ற பொருளும் உண்டு'' என்று அவ்வப்போது இந்துக்களை, இந்து மதத்தைக் கேலி செய்வது என்பதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தவர் டாக்டர் கலைஞர்.

மு.க. ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னதைத் திரும்பப்பெறச் செய்தவர் டாக்டர் கலைஞர்.

Dr Ramasubramanian urges DMK to drop Dravidian Ideology

இதேபோல் இந்துக்களின் புனித சின்னமான தாலியைக் கொக்சைப்படுத்திப் பேசியதையும், திராவிடக் கழகம் நடத்திய ""தாலி அறுப்பு'' நிகழ்ச்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஆதரித்துப் பேசியதையும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை ரசிக்கவே செய்தது.

இதேபோல் அந்தணர்கள் பூணூல் அறுப்பு, ஏழை அந்தணர்கள் தாக்கப்படுவது ஆகியவைப் பற்றிக் கண்டனம் கூட தெரிவிக்காதது திராவிட முன்னேற்றக் கழகம். அந்தணர்கள் அவமதிப்பு, அவர்கள் ஒரு கலக்கத்துடன் வாழ்வது ஆகியவற்றை விரும்பி ரசிக்கின்ற அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஆகிவிட்டது.

மாறாக "இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும்'' நாங்கள் பாதுகாவலர்கள், ரம்ஜான் நேரத்தில் குல்லா அணிந்து நோன்புக் கஞ்சி குடிப்போம், கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வோம் ஆனால் இந்து மத விழாக்களைப் புறக்கணிப்போம், இந்து மத பழக்க வழக்கங்களைக் கேலி செய்வோம் என்றும் ""அந்தணர் அவமதிப்பினைத் தொடர்வோம்'' என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுவதும் இந்துமதத்தைச் சேர்ந்தோர் பலருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. 90% அந்தணர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தங்கள் எதிரியாகவே பார்க்கின்றனர்.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல மாறுதல்கள் நடைபெற்று வருகின்றன. கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் (கனிமொழி தவிர) அனைவரும் வெளிப்படையாகக் கோயில்களுக்குச் செல்வது, பூஜை செய்வது ஆகியவற்றை இந்துமக்கள் வரவேற்கத்தான் செய்கிறார்கள். காவேரி புஷ்கரம் எனும் 144 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் காவிரித் திருவிழாவிற்கு மாயவரத்தில் திருமதி. துர்கா ஸ்டாலின் வழிப்பட்டதையும், அங்கு பூஜை செய்த அந்தணர்களுக்கு மரியாதை செய்ததையும் வெகுவாகப் பாராட்டினார்கள்.

கனிமொழி விடுதலைக்காக அவர் அம்மா ராஜாத்தி அவர்கள் கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் சூப்பர்ஸ்டார் என்று போற்றப்படும் நடிகர் ரஜினிகாந்த் ""தான் ஆன்மீக அரசியலில்'' ஈடுப்பட போகின்றார் எனும் அறிவிப்பு, ஜெயலலிதா எனும் மிகப் பெரிய ஆளுமை இல்லாத நிலையில், பெரும்பாலான இந்துக்கள் ஓட்டு அவருக்குச் சென்றுவிடும் என்ற ஆய்வுகள் வெளியாகின்றன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ""பெரியார் , திராவிடக் கொள்கைகள்'' என்று பேசினாலும், எம்.ஜி.ஆர். காலத்திலேயே இந்துமத எதிர்ப்பினைக் கைவிட்டு, ஆலய வழிபாட்டினை ஆரம்பித்துவிட்டது. இது மிகப்பெரிய அளவில் ஜெயலலிதா காலத்தில் விரிவாகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இறைவழிபாடு என்பதை வெளிப்படையாகவே செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது அரசியல் வாழ்க்கையில் பங்கம் ஏற்படாமல், அடுத்து வரும் பொதுத் தேர்தல்களில் பெரிய வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்து, தான் முதல்வராக வேண்டுமென்று கடுமையாக முயற்சி செய்துவரும் ஸ்டாலின், தனக்கு சுக்கிரன் புத்தி சரியில்லை, அதற்காக ஒரு வேள்வி நடத்திப் ப்ரீத்தி செய்ய வேண்டுமென்பதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இந்தப் பரிகாரத்தை செய்திருக்கிறார். காரிலே கோயிலை வலம் வந்திருக்கிறார். பல வேத அந்தணர்களுக்கு வேஷ்டி, துண்டு, பணம் ஆகியவற்றை தானம் வழங்கியிருக்கிறார்.

ஆனால் வெளிப்படையாகக் கோயிலுக்குள் செல்லத் தயக்கம் காட்டி, கோபுரவாயிலில் நின்று கொண்டு அவருக்குச் செய்யப்பட்ட மரியாதையை ஏற்றார். அதாவது தெய்வ பக்தியை வெளிப்படையாக உணர்த்துவதில் தயக்கம் காட்டியிருக்கிறார். இதற்குக் காரணம், காலத்திற்கு ஒவ்வாத திராவிடக் கழகத் தொடர்பே. அதனால் அவர் நெற்றியில் இட்ட குங்குமம், மஞ்சளை உடனே அழித்தது பெரும் சச்சரவினை ஏற்படுத்தியுள்ளது.

""குங்குமம் என்றால் அழிப்பார் குல்லாப் போட்டால் மகிழ்வார் அவர் யார்?'' என்ற வகையில் கேலி செய்யும் விடுகதைகள், மீம்ஸ் ஆகியவைகளுக்குப் பஞ்சமில்லாமல் செய்துவிட்டார்.

இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் "இந்து ஒற்றுமையும், இந்து எதிர்ப்பாளர்களுக்குக் கடுமையான எதிர்ப்பும்'' உருவாகி வருகின்றது. தமிழகத்திலும் ""இந்து சக்தி மிகப் பெரிய வாக்கு வங்கி''யாக உருவாகி வருகின்றது.

அவமானப்படுகின்ற அந்தணர்கள், ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியல் அரங்கில் ரஜினிகாந்த் பக்கம் சாய நிறைய வாய்ப்புள்ளது.

ஆக, இனியும் ஒரு பிரயோஜனமும் இல்லாத அரசியல் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள திராவிடக் கழகத்தை முற்றிலும் புறந்தள்ளி விட்டு, இந்து மதவெறுப்பைக் கைவிட்டு, விட்டு இந்து திருக்கோயில்களுக்குச் சென்று வெளிப்படையான வழிபாடு, அந்தணர்களையும் அரவணைப்பது, அனைத்து மதங்களையும் ஒன்றாக பாவிப்பது என்ற நிலைப்பாட்டினை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்தால் தான் இனி அதற்கு அரசியல் ரீதியாக எதிர்காலம் உண்டு.

மு.க. ஸ்டாலின் இதை உணர்ந்து செயல்படுவதே நல்லது. இது காலத்தின் கட்டாயம்!

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்தே. ஒன் இந்தியா குழுமத்தின் கருத்து அல்ல).

English summary
Dr Ramasubramanian has urged that DMK to drop Dravidian Ideology for its political future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X